22 . பொதுவான தர்மங்கள் – பகுதி மூன்று

சேவையே மேலான பாக்கியம்

மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.

சேவைஎன்று தெரியாமலே அவரவரும் தமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வ தேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்யவேண்டும் என்கிறேன். நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலைஇத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூக சேவை வேறா என்று எண்ணக்கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடுகூடஅசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும்என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மை சொந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான். ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால் போதும். அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்! நமக்கே ஒரு சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும், சந்தோஷமும் ஏற்பட்டு அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.

மனிதர்களுக்கு மட்டுமின்றி, மாடு போன்ற ஜீவன்களுக்கும் சேவை செய்ய வேண்டும். பழைய நாளில் கால்நடைகளுக்காக என்றே குளம் வெட்டுவது, அவை தினவு தீர்த்துக் கொள்வதற்காக உராய்ந்து கொள்வதற்கு அங்கங்கே கல் போடுவது என்று வைத்துக் கொண்டிருந்தார்கள். தினமும் ஒவ்வொருவரும் ஒரு மாட்டுக்கேனும் ஒரு பிடி புல்லோ, அகத்திக் கீரையோ கொடுக்க வேண்டும். மாட்டுக் ஒரு பிடி புல் கொடுப்பதைகோ க்ராஸம்என்று பெரிய தர்மமாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. ‘க்ராஸம்என்றால் ஒரு வாயளவு (Mouthful); இங்கிலீஷில் புல்லை grass என்பதுகூட இதிலிருந்தே வந்திருக்கலாம்.

யாகம், யக்ஞம், தர்ப்பணம், திவஸம் முதலிய இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, மற்ற உலகங்களிலிருப்பவர்களுக்கும் நம் சேவையை விஸ்தரிக்கின்றன என்ற உணர்வோடு அவற்றைச் செய்ய வேண்டும். இவையெல்லாம் மந்திரத்தோடு சேர்த்துச் செய்யப்படும் சேவை.

நம்மைப் போலவே செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லோரும் ஒரே சங்கமாக ஒரே அபிப்ராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம். அப்படிப் பலர் கூடிச் செய்யும்போது நிறையப் பணி செய்ய முடியும். சத்தியத்தாலும் நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கங்கள் உடையாமல் காக்க வேண்டும். பரோபகாரம் செய்பவர்களுக்கு ஊக்கமும், தைரியமும் அத்தியாவசியம். மான அவமானத்தைப் பொருட்படுத்தாத குணம் வேண்டும்.

பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும், கண்களைக் கவர்கிற காட்சிசாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதை பிறருக்குச் சேவை செய்வதில் செலவழிக்க வேண்டும்.

வாழ்க்கைத் தொல்லைகளிடையே கொஞ்சம் உல்லாசமாகப் பொழுது போக்குவது ஒரு தப்பா என்று கேட்பீர்கள். உங்களுக்குச் சொல்கிறேன். பரோபகாரமாகச் சேவை செய்தால் அதுவே பெரிய உல்லாசம் என்று தெரியும். அதுவே விளையாட்டு, அதுவே இன்பம்.

கிருஷ்ண பரமாத்மா இப்படித்தான் வெளியிலே விளையாடுவதாகத் தெரிந்தாலும், உள்ளே அத்தனையும் பரோபகார சேவைதான் செய்தான். எத்தனை பேருடைய, எத்தனை எத்தனை கஷ்டங்களை விளையாட்டாகவே போக்கடித்தான்? குன்றைத் தூக்கிப் பிடித்தது விளையாட்டு மாதிரி இருக்கும். ஆனால் கோபர்களைக் காப்பதற்கே அவ்வளவு பெரிய மலையை பாலகிருஷ்ணன் தூக்கினான். சின்னக் குழந்தை விஷம் கக்கும் காளிங்கனின் படத்திலே நர்த்தனம் செய்தது வெளியிலே பார்த்தால் விளையாட்டு; உண்மையில் அதுவும் ஜனங்களைக் காத்து அவர்களுக்கு நீர் நிலையை மீட்டுத் தருவதற்காக செய்த சேவைதான். இப்படித்தான் எத்தனையோ விளையாட்டுக்கள் செய்தான். அத்தனையும் சேவை. எவனைப்போல் விளையாடினவன் இல்லையோ அவனைப்போல் சேவை செய்தவனும் இல்லை என்று கிருஷ்ண பரமாத்மாவின் உதாரணத்தில் பார்க்கிறோம். லௌகிக சேவை மட்டுமில்லை. ஞான சேவையும் நிறையச் செய்தான். அர்ஜுனன், உத்தவர் போன்றவர்களுக்கு மகா உபதேசங்கள் செய்தான். சேவை, ஞானம், விளையாட்டு எல்லாம் அவனிடம் ஒன்றாக இருந்தன. துளிக்கூடப் பற்றுதல் இன்றியே இத்தனையும் செய்தான். சிரித்துக்கொண்டே சாந்தமாக இவ்வளவையும் செய்தான். அதனாலேயே அநாயாசமாகச் செய்ய முடிந்தது. நம்மிலும் சேவை செய்கிறவர்களுகெல்லாம் இந்தச் சிரிப்பும் சாந்தமும் எப்போதும் இருக்க வேண்டும்தைரியம், ஊக்கம் இவற்றோடு.

பகவான் எடுத்த பல அவதாரங்களில் கிருஷ்ணாவதாரத்தில்தான் சேவை அதிகம். ராமாவதாரத்தில் சேவைக்கென்றே ஆஞ்சநேய ஸ்வாமி வந்தார். இவர்கள் இருவரையும் ஸ்மரித்து நாமும் சுத்தமான உள்ளத்துடன், எந்த சுய நலமும் கருதாமல் எவ்வித விளம்பரத்துக்கும் ஆசைப்படாமல் சேவை செய்ய வேண்டும்.

நமக்குத்தீட்டுஏற்பட்டால் அச்சமயத்தில் உலகோடு சேர முடியாமல் ஒதுங்கியிருக்கிறோமல்லவா? அவ்விதமே உலகுக்கு உபயோகமாக சேவை செய்யாத ஒவ்வொரு நாளும் நமக்கு தீட்டுநாள் என்று கருதி, அவரவரும் தம்மாலான சேவையில் ஈடுபடவேண்டும்.

ஜீவராசிகளுக்கு செய்கிற உபகாரத்தால் சகல பிராணிகளுக்கும் மாதா பிதாவாக இருக்கப்பட்ட பரமேசுவரனுக்கே பூஜை பண்ணியதாக ஆகிறது. இதைத்தான் திருமூலர் திருமந்திரத்திலும் சொல்லியிருக்கிறது.

நடமாடக் கோயில் நம்பர்க் கொன் றீயின்

படமாடக் கோயில்பகவற்கீ தாமே.

எல்லா உயிர்களின் திருபதிக்காக

தேவதைகளை உத்தேசித்த யாகங்கள், பிதிருக்களை உத்தேசித்த தர்ப்பணம், இவற்றை விடாமல் செய்ய வேண்டும். இவற்றோடு தெய்வத்தை உத்தேசித்த பூஜை, அதிதிகளை உத்தேசித்து அன்னமிடுதல், சகல ஜீவராசிகளையும் உத்தேசித்து வைச்வதேவம் இவற்றையும் நம் முன்னோர்கள் செய்து வந்தனர். நீங்கள் இவற்றைச் செய்கிறீர்களோ இல்லையோ காதினாலாவது இவற்றைப் பற்றிக் கேட்டால் நல்லது. எத்தனையோ படித்திருக்கிறீர்கள்; படிக்கிறீர்கள். எந்தெந்த தேசத்து சரித்திரங்களையோ தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். நம் தேசத்தில் யுகாந்தரமாக இருந்து வந்த தர்மங்களையும், அவற்றின் பெயர்களையுமாவது, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே இதைச் சொல்கிறேன். ‘வைச்வதேவம்என்பது இவற்றில் ஒன்று. அது என்ன என்று சொல்கிறேன்.

நமக்கு இந்த உடம்பு இருப்பதால் எத்தனை ஜீவராசிகளுக்கு எத்தனை உபத்திரவம் விளைவிக்கிறோம்? நம் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதாக பெருமையுடன் எண்ணுகிறோம். ஆனால் யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு வீடும் ஒரு கசாப்புக் கடையாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது. ‘ஒரு கசாப்புக் கடை அல்ல. ஐந்து கசாப்புக் கடைகள்என்கிறது தர்ம சாஸ்திரம்.

அந்த ஐந்து என்ன?

பஞ்சஸுனாக்ரு ஹஸ்தஸ்ய வர்தந்தே ( ஹரஹ: ஸதா

கண்டினீ பேஷணீ கல்லீ ஜலகும்ப உபஸ்கர🙂

அரிவாள்மனை (கண்டினீ) ஒரு கசாப்புக் கடை. அதில்தானே காய்கறிகளை நறுக்குகிறோம்? காய்கறிகளும் உயிருள்ளனவைதாம். அவற்றை வதைக்குமிடம் ஒரு கசாப்புக் கடை. இரண்டாவது அம்மி, எந்திரம், உரல், நெல் மெஷின்இத்யாதி (பேஷணீ). இவற்றில்தான் கருணையே இல்லாமல் தானியங்களை அரைக்கிறோம்.

இங்கே மாமிச போஜனக்காரர்கள் எழுப்புகிற ஒரு ஆட்சேபணைக்குப் பதில் சொல்ல வேண்டும். “நாங்கள் சாப்பிடுகிற ஆடு, மாடு, கோழிகள் மாதிரி நீங்கள் சாப்பிடுகிற காய்கறி, தான்யாதிகளுக்கும் உயிர் இருக்கத்தானே செய்கிறதுஎன்று இவர்கள் சைவ போஜனக்காரர்களைக் கேட்கிறார்கள். வாஸ்தவம். ஆனால் இந்த இரு உணவு முறைகளிடையே அடியோடு வித்தியாசமில்லாவிட்டாலும் (difference of kind) ஹிம்ஸை அம்சத்தில் வித்தியாசம் (difference in degree) இருக்கத்தான் செய்கிறது. தாவரங்களுக்கு உயிரும் உணர்ச்சியும் இருப்பது வாஸ்தவம்தான் என்றாலும், மனுஷ்யர்களுக்கும் மிருக பட்சிகளுக்கும் உள்ள அளவுக்கு (degree) அவற்றுக்குவலி” (pain) என்ற உணர்ச்சி கிடையாது. இதை ஸயன்ஸ்படி அளவு எடுத்துக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதுவும் தவிர, அநேகமாக, கீரை மாதிரி சிலவற்றைத்தான் வேரோடு எடுத்துச் சாப்பிடுகிறோமே தவிர, மற்றச் செடிகளின் உயிரை வதைக்காமல்தான் அதிலிருந்து காய்கறிகளை மட்டும் பறித்துக் கொள்கிறோம். இப்படிப் பறிப்பது நமக்கு தலைமயிரை அல்லது நகத்தை கத்தரிக்கிற மாதிரி. அந்தச் செடிகளுக்கு ரொம்பக் குறைச்சலாகத்தான் வலியுண்டாகும். இற்றுப் போயிருக்கிற பழத்தை மட்டும் புசிப்பதாலோ, இந்த அளவுக்குக்கூட தாவர வர்க்கத்துக்கு துன்பம் இல்லை. பயிர்கள் நன்றாக முற்றிச் சாய்ந்த பிற்பாடுதான் அவற்றை அடித்துத் தான்யங்களை எடுத்துக் கொள்கிறோம். நாம் அறுவடை செய்யாவிட்டால்கூட, அந்தப் பயிர்களே கொஞ்ச நாளில் தாங்களே தலை சாய்த்துவிடப் போகிறவைதான்.

தாவர உணவு மாமிஸ போஜனத்தைவிட உயர்ந்தது என்று இன்னோர் விதத்திலும் மாம்ஸ போஜனக்கார்களுக்குப் புரியவைக்கலாம். இப்போது சில தினுஸான மாம்ஸாதிகளைத்தான் இவர்கள் சாப்பிடுகிறார்கள். மாட்டு மாம்ஸம் சாப்பிடலாமே தவிர, குதிரை மாம்ஸம் சாப்பிட்டால் நிஷித்தம் (இழுக்கு) என்கிறார்கள். உலக யுத்தத்தின்போது ஒரு சந்தர்ப்பத்தில் சேனா வீரர்களுக்கு குதிரை மாமிஸம் தரலாமா என்ற கேள்வி வந்தபோது, அதை நான்வெஜிடேரியன்காரர்களே ரொம்பக் கேவலம் என்று எதிர்த்தார்கள். இதே மாதிரி இவர்கள் மிருக, பட்சிகள், மத்ஸ்யம் முதலானதுகளை சாப்பிடுவது நாகரிகம்தான் என்று சொல்கிறபோதே ஆப்பிரிக்காவில் ஏதோ காட்டு ஜனங்கள் நர மாமிஸம் சாப்பிடுகிறார்கள் என்றால், இவர்கள் அதை அநாகரிகம், காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லி நரமாம்ஸ பக்ஷிணிகள் (cannibals) என்று திட்டுகிறார்கள். ‘நாங்கள் சாப்பிடும் வஸ்துக்களைப் போல நீங்கள் சாப்பிடும் தான்யங்களுக்கு உயிர் இருக்கத்தானே செய்கிறது?’ என்று இவர்கள் நம்மிடம் (சைவ போஜனக்காரர்களிடம்) கேட்கிறபோது, நாம் பதிலுக்கு, “ஆமாம்! ஆனால் அதே மாதிரி ஜீவஹிம்ஸை என்று வருகிறபோது எல்லா உயிர்களும் ஒன்றுதானே; நீங்கள் ஏன் மநுஷ்யர்களைப் பிடித்துத் தின்னாமல், மனித வர்கத்துக்கும் மிருக வர்கத்துக்கும் வித்தியாசம் பாராட்டுகிறீர்கள்? அதே மாதிரி தான்; நாங்கள் மிருக வர்கத்துக்கும் தாவரங்களுக்கும் வித்தியாசம் பாராட்டுகிறோம். மாம்ஸாதிகளைச் சாப்பிடாமல், சாக போஜனமே பண்ணுவது ஸத்வ குண அபிவிருத்திக்கும் அநுகூலமாக இருக்கிறதுஎன்று சொல்ல வேண்டும். தவிர்க்க முடியாமல் நாம் உயிர் வாழ்வதற்காக இப்படி கண்டிணீ பேஷணீ என்ற கசாப்பு யந்திரங்களை வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மூன்றாவது கசாப்புக்கடை அடுப்பு (சுல்லி). நெருப்பிலே பல பூச்சிகள் விழுந்து சாகின்றன. ஓர் இடத்தில் நெருப்பைப் போடுகிறோம். அங்கே ஓர் எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கும். நெருப்புப் பட்டவுடன் அது பொசுங்கிப் போகிறது. இப்படியே குடத்தை ஓரிடத்தில் வைக்கிறோம். கீழே எறும்போ வேறு ஏதாவது பூச்சியோ இருந்தால் நசுங்கிப் போகிறது. குடம் முதலிய பாத்திரங்களில் ஈரம் இருப்பதால் வெயில் காலத்தில் எறும்பு முதலிய அதை மொய்த்துக் கொள்கின்றன. அவற்றை நாம் கொல்ல நேருகிறது. இதனால்ஜலகும்பத்தையும் ஒரு கசாப்புக் கடையாக வைத்தார்கள். கடைசியில்உபஸ்கரம்என்பது ஒரு கசாப்புக் கடை. ‘உபஸ்கரம்என்றால் துடைப்பக்கட்டை. பெருக்கும்போது எத்தனை ஜீவராசிகளை வதைக்கிறோம்? இப்படி ஐந்து கசாப்பு மெஷின்கள் நம் வீடுகளில் இருக்கின்றன.

நமக்குத் தீங்கு செய்கிற பிராணிகளுக்குக்கூட நாம் பதிலுக்கு தீங்கு செய்யக்கூடாது. இங்கேயோ தீங்கு செய்பவற்றோடு ஒரு தீங்கும் இழைக்காத பிராணிகளையும் நாம் இத்தனை ஹிம்ஸைக்கு ஆளாக்க நேருகிறது. யோசித்துப் பார்த்தால் இத்தனை ஜீவராசிகளுக்கு இத்தனை உபத்திரவத்தை உண்டாக்கிக் கொண்டு வயிற்றை வளர்க்கிறோமே என்று துக்கம் உண்டாகிறது. ஆனால் இதெல்லாம் நம்மால் தவிர்க்க முடியாத விஷயங்கள். நாம் வேண்டுமென்று இவற்றைக் கொல்லவில்லை. எனவே நம்மை மீறிச் செய்கிற இந்தத் தோஷங்களுக்குப் பிராயச்சித்தம் உண்டு. அப்படிச் செய்கிற பிராயச்சித்தமேவைசுவதேவம்என்பது.

நம்மால் ஹிம்சைக்கு ஆளான ஜீவராசிகளுக்கெல்லாம் நல்ல கதி கிடைக்க வேண்டும்; நம்மை பகவான் மன்னிக்க வேண்டும்என்ற எண்ணத்துடன் எல்லா உயிர்களின் திருப்திக்காகவும் பலி கொடுக்கப்படுகிறது. இந்த விசுவத்தில் எவ்வளவு பிராணிகள் உண்டோ, நாய், காக்கை, சமூகப்பிரஷ்டன் உள்பட எல்லார்க்கும் எல்லாவற்றுக்கும் வைசுவதேவத்தில் பலி உண்டு. வைசுவதேவம் செய்தால் நாம் செய்கிற பல தோஷங்கள் விலகும். பல உயிர்களுக்கு ஆகாரம் கிடைக்கும்.

பூதயக்ஞமான இந்த வைசுவதேவம், பூஜை, ஹோமம் முதலிய தேவயக்ஞம், மனுஷ்ய யக்ஞம் (விருந்தோம்பல்) பிதுரு யக்ஞம் (தர்ப்பணம்) முதலியவற்றோடு, தான் கற்றுப் பயன் பெற்ற வேதத்தை நிச்சயமாக இன்னொருத்தருக்குக் கற்பிக்கிறதாகிய பிரம்ம யக்ஞம் என்கிற ஞான வேள்வியும் செய்யவேண்டும் என்று விதி. இந்தப் பஞ்ச மகாயக்ஞங்கள் அனைத்தையும் பிரம்ம புத்திரர்களான ரிஷிகள் முதற்கொண்டு யாவரும் யுகம் யுகமாகப் பண்ணிக்கொண்டு வந்தார்கள். ஆதி காலத்திலிருந்து நம் தாத்தா காலம் வரையில் சாஸ்திரப் பிரகாரம் எல்லோரும் இவற்றை ஒழுங்காகச் செய்து வந்தார்கள். பிரளய காலம் வரையில் இவை அவிச் சின்னமாக (முறிவுபடாமல்) நடந்து வர வேண்டும். ஆனால் நம் நாளில் இந்த இழையைக் கத்தரித்து விட்ட பாக்கியத்தை அடைந்திருக்கிறோம். அநாதி காலமாக வந்துள்ள அநுஷ்டானங்களை கபளீகரம் செய்துவிட்டு நம்மோடு மட்டுமல்லாமல், நம்முடைய பின் சந்ததியாருக்கும் இவற்றைப் பின்பற்றுவதால் உண்டாகும் நன்மை விளையாமல் தடுத்து விட்டிருக்கிறோம்!

நான் எத்தனையோ அநுஷ்டானங்களைச் சொல்கிறேனே, அவற்றில் எவ்வளவு நாம் பண்ணுகிறோம். எவ்வளவு பண்ணவில்லை; எவ்வளவு பண்ண முடியும் என்று யோசித்துப் பாருங்கள். எல்லாவற்றையும் பண்ண முடியாவிட்டாலும் ஜீவனோபாயத்தை அநுசரித்து முடிந்தவைகளையாவது தவறாமல் பண்ண வேண்டும்! மற்றவற்றைப் பண்ணவில்லையே என்று பச்சாதாபமாவது படவேண்டும்.