இளைஞர் கடமை
பிறருக்கு உபகாரம் செய்வதற்கே நமது சரீரம் ஏற்பட்டிருக்கிறது என்பது ஆன்றோர் மொழி. ‘பரோபகாரார்த்தம் இதம் சரீரம்’ என்பார்கள். தேகத்தில் நல்ல தெம்பு இருக்கிறபோதே, யுவர்கள் சேவை நெறியில் ஈடுபட வேண்டும். பிறருக்குச் சேவை செய்வதற்காகவே தேக பலத்தை நன்கு காத்துக்கொள்ள வேண்டும். தேக பலத்தைவிட ஒழுக்க பலம் முக்கியம். நமது மதம் கூறுகிற சாஸ்திர தர்ம நெறியின்படி சுத்தமான வாழ்வு வாழ வேண்டும். இப்படி நாம் தூய்மையாக இருந்தால்தான் பிறருக்கு நல்ல முறையில் சேவை செய்ய முடியும். காமக் குரோதாதிகள் இருந்தால் எப்படி நல்ல முறையில் சேவை செய்வது?
சமூகசேவை உண்மையாக இருக்க வேண்டுமாகில் சேவை செய்கிறவர்களுக்கு தர்மத்திலும், சத்தியத்திலும் தளராத பிடிப்பு இருக்க வேண்டும். அவர்களுக்குப் பயம் என்பதே கூடாது. பயமற்ற நிலை வேறு; ஹிம்ஸை வழியில் நடப்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. யுவர்களுக்கெல்லாம் உதாரணமாக இருப்பவர் ஆஞ்சநேய ஸ்வாமி. அவருக்கு இருந்த பலம் மிகப் பெரியது. சுபாவத்திலோ சாந்தராக இருந்தார். கோபித்து எழ வேண்டிய சமயத்தில் மஹாவீரராக எழும்பி ஹதாஹதம் செய்தார். அவருடைய புத்தி பலம் பெரிது. ஆயினும் பக்தியில் தோய்ந்து அடக்கத்துடன், விநயமே ஸ்வரூபமாகச் சேவை செய்து கொண்டிருந்தார். பயமென்பதே அவருக்கு இல்லை. ஆனாலும், தாமாக ஹிம்ஸை வழியில் அவர் சென்றதில்லை. பிறருடைய ஹிம்ஸைக்கு எதிர் மருந்தாகவே தாமும் எதிர்த்தார். அவர் சொந்த நலனுக்காக பலத்தைப் பிரயோஜனப் படுத்தவில்லை. துர்பலருக்குக் கொடியவரால் கஷ்டம் ஏற்பட்டால், தம் நலனையும் பொருட்படுத்தாமல் பலவீனரை ரட்சிப்பதில் அஞ்சா நெஞ்சராகச் சேவை செய்தார். சிவாஜியும் இப்படிப்பட்ட ஓர் உதாரண புருஷர். ஆஞ்சநேயரின் அவதாரமாக மதிக்கப்படும் ஸமர்த்த ராமதாஸரின் அத்யந்த சிஷ்யராக இருந்ததாலே சிவாஜிக்கு இப்படிப்பட்ட குணசம்பத்து இருந்தது.
தேக பலம், அஹிம்ஸை, பயமற்ற நிலை இவற்றோடு சொந்தக் கஷ்டங்களை பாராட்டாமல் பிறரைக் காக்கும் பான்மையும் சேர்ந்தால் அது மிகப் பெரிய சீலமாகும். இதற்கே ‘க்ஷத்ர தர்மம்’ என்று முன்னாளில் பெயர் சொல்லப்பட்டது. ‘க்ஷதாத் கில த்ராயதே; இதி க்ஷத்ரம்’ — ‘பிறரைத் தீமையிலிருந்து காப்பதே க்ஷத்ரம்’ என்பது இதன் பொருள். இப்போது நம் நாட்டு யுவர்கள் இந்த க்ஷத்ர தர்மத்தை மேற்கொள்ள நிரம்ப அவசியமாயிருக்கிறது. பலிஷ்டர்களைக் கண்டு பயப்படக்கூடாது. பலவீனர்களை வெறும் மிருக பலம் படைத்தவர்கள் கொடுமைப்படுத்தாதபடி சர்வத் தியாகம் செய்து காப்பாற்ற வேண்டும். மெஜாரிடி, மைனாரிடி என்ற பயம் இல்லாமல், தர்மத்துக்கு ஆபத்து வந்தால் உயிரைத் திருணமாக மதித்துப் போராடுகிற நெறி இளைஞர்களுக்கு இருக்க வேண்டும். இதுவே சேவையில் ஈடுபட்ட யுவர்களின் தர்மம்.
துரதிர்ஷ்டவசமாக இதற்கு நேர்மாறான போக்கைக் காணும்போது வருத்தமாக இருக்கிறது. பலவீனர்களைப் பயமுறுத்தி ஹிம்ஸை முறையால் பணியவைக்கிற போக்கு நல்லதல்ல. இந்தமாதிரி செய்கிற ஸ்டிரைக், உண்ணாவிரதம், கொடும்பாவி கொளுத்தல், கிளர்ச்சி இவையெல்லாம் உண்மையில் இவற்றைச் செய்கிறவர்களின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது. தங்களுடைய லட்சியத்திலுள்ள சத்தியத்தின் சக்தியில் நம்பிக்கை இல்லாததால்தான் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். பெரும்பான்மை (மெஜாரிட்டி) பலம் படைத்தவர்கள் பலத்தை துஷ்பிரயோகம் செய்யும்போது அதைக்கண்டு பயப்படுவதும், அதேபோல் தங்கள் பலத்தை துஷ்பிரயோகம் செய்து பலவீனர்களைப் பயமுறுத்துவதும் தேசத்துக்கு நல்லதல்ல. மக்களின் இந்தப் பலவீனம் சர்க்காரிலும்தானே பிரதிபலிக்கிறது. மறுபடி நாம் இந்த தேசத்தில் பயமில்லாத பிரஜைகளாகத் தலையை நிமிர்த்தி நடக்க வேண்டுமானால் க்ஷத்ர தர்மத்தை விருத்தி செய்ய வேண்டும். தனிமனிதர்கள் உறுதியும் ஆத்மபலமும் கொண்டிருப்பது, அவர்கள் கட்டுப்பாட்டுடன் ஒன்றுகூடி ஐக்கியமாக உழைப்பது, தீமையையும் அடக்கு முறையையும் கண்டு அஞ்சாத நெஞ்சுறுதியுடன் போராடுவது—இவையெல்லாம் இந்த தர்மத்தில் அடக்கம். லோக க்ஷேமம் ஒன்றே லக்ஷியமாகக் கொண்டு இந்த தர்மத்தை நடத்திக் காட்டினால் நாட்டின் ஒழுக்கம் மிக உயர்ந்த நிலை அடையும். அரசாங்கத்தின் தரமும் தானாகவே உயரும்.
அஹிம்ஸா ஸோல்ஜர்கள் தேவை
‘நவீன ஸயன்ஸின் அபிவிருத்தியால் எல்லா சௌகரியங்களையும் செய்து கொண்டு ஆனந்தமாக வாழலாம்; மதமும், அநுஷ்டானமும் எதற்கு வேண்டும்?’ என்று சிலர் கேட்கிறார்கள். ஸயன்ஸினால் பல சௌகரிய சாதனங்களை உண்டாக்க முடிவது உண்மையே. ஆனால் இதனால் ஆனந்தம் வந்து விட்டதா என்பதுதான் கேள்வி. ஆனந்தம் என்பது மனத்திருப்தியை, உள்ள நிறைவைக் குறித்த விஷயம். சௌகரிய வாழ்வுக்கு இதெல்லாம் தேவை. இன்னமும் தேவைகள் இருக்கின்றன என்ற அடிப்படையில் ஓயாமல் திரவியங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதில் மக்கள் திருப்தியா அடைந்து வருகிறார்கள்? ஏற்கெனவே இருந்த திருப்தியும் போய்விட்டதைப் பார்க்கிறோம். அதோடு இதில் போட்டா போட்டி, வர்க்க பேதம், துவேஷம் எல்லாமும் வளர்ந்துவிட்டன. மநுஷ்யனின் ஆசையைப் பூர்த்தி செய்வது முடியாத காரியம். ஆசைகளைக் குறைத்துக் கொண்டாலே உண்மையான ஆனந்தம் காணமுடியும். இதற்கு வழி காட்டுவது மதம்தான். ஆனபடியால், ஸயன்ஸ் அபிவிருத்தி ஆகியிருப்பதாலேயே மதத்தின் தேவையும் அதிகமாயிருக்கிறது எனலாம்.
லௌகிக, விஞ்ஞான அபிவிருத்தியால் ஆத்ம சாந்தி காண முடியவில்லை என்று அமெரிக்கா, ருஷ்யா ஆகிய இரு தேசங்களும் நிதரிசனமாகக் காட்டுகின்றன. முதலில் ஸ்புட்னிக் செய்து உலகைக் சுற்றவிட்ட நாடு ருஷியா. அது கம்யூனிஸ நாடு. அங்கு மத போதனை கிடையாது. இருந்தாலும் டெக்னாலஜி அபிவிருத்தி மட்டும் அந்த நாட்டுக்கு உள்ள நிறைவை அளிக்கவில்லை. அதனால்தான் நமது மகாபாரதத்தை ருஷிய மொழியில் மொழி பெயர்த்துத் தங்கள் பள்ளிகளில் போதிக்க அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அமெரிக்க மக்களுக்கு ஆத்ம சந்துஷ்டி இல்லாததாலேயே அவர்கள் யோகம், வேதாந்தம், சங்கீ்ர்த்தனம் இவற்றில் திரும்பியிருக்கிறார்கள். ஸயன்ஸில் மிக முன்னேறிய தேசங்கள் நம் பாரத தேசத்தின் பக்கம் திரும்பிப் பயனடைய முயலும்போது, நாமே நமது புராதன தர்மத்தை மறந்து வெறும் இந்திரிய சௌக்கியத்தில் இறங்கினால் அது ரொம்பவும் பரிதாபமாகும்.
நம் தேசத்தில் லௌகிக ஆசையும், நாஸ்திகமும், தெய்வ நிந்தனையும் தலைதூக்கினால்கூட, ஜீவசக்தி வாய்ந்த நம்முடைய ஸநாதன தர்மத்துக்கு எந்நாளும் அழிவு வராது என்று நம்பலாம். அப்படி அழிவு வராமல் காப்பது நம்முடைய பொறுப்பு.
‘காப்பது’ என்றால் என்ன செய்யவேண்டும்? நாஸ்திகர்களோடு, மத நம்பிக்கை இல்லாதவர்களோடு சண்டை போடுவதா? இல்லை. ஹிந்து மதம் சண்டையின் மூலம் தன்னை வளர்த்துக் கொண்டதாகச் சரித்திரமே கிடையாது. அல்லது சமூகப் பணிகளைக் காட்டி நம் சமயத்துக்கு மற்றவரை இழுத்துக்கொண்டதாகவும் சரித்திரம் இல்லை. ஆக, ஹிந்து மதம் சண்டையும் போடவில்லை; மதமாற்ற நோக்கத்தோடு சமூக ரீதியில் சேவையும் செய்யவில்லை. ஆனாலும், இத்தனை யுகாந்தரமாக, எத்தனை எத்தனையோ எதிர்ப்பு வந்தும் அது அழியாமல் இருப்பதை மட்டும் பிரத்யக்ஷமாகப் பார்க்கிறோம். இது எதனால்? நம் மதத்திலுள்ள தத்துவங்களின் சத்தியத்தினால் என்று சொல்லலாமா? நம் மதத் தத்துவங்கள் பரம உத்தமமானவை என்பது உண்மைதான். ஆனால் கூட, பாமர மக்கள் உள்பட ஏராளமானவர்கள் நம் மதத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு இந்தத் தத்துவ மகிமைதான் காரணம் என்று நான் சொல்லமாட்டேன். நம் ஜனங்களில் ஏராளமானவர்களுக்கு இந்தத் தத்துவங்கள் சமாச்சாரமே தெரியாது.
பின் என்னதான் காரணம்? ஒருவிதமான பிரசாரமும் இல்லாமலே, பழங்கால போப் மாதிரி, லாமா மாதிரி, காலிஃப் மாதிரி, பலம் வாய்ந்த குருபீடங்களும் இல்லாமலே இத்தனை கோடி மக்கள் இத்தனை ஆயிரம் வருஷங்களாக நம் மதத்தில் நிலைத்து இருப்பதற்கு காரணம் என்ன? முன்பு பிற மதத்தினர் ஆட்சியில் பலவிதக் கொடுமைகளுக்கு ஆளாகியும், அவர்கள் நயமாகவும் பயமாகவும் எத்தனையோ பிரசாரங்கள் செய்தும்கூடக் கோடிக்கணக்கான மக்கள் நம் சநாதன தர்மத்திலேயே இருப்பதற்குக் காரணம் என்ன? எனக்குத் தெரிகிற காரணம் இதுதான். மதத்தைப் பற்றிப் பேசுவதை விட, தத்வார்த்தங்களை வாயால் விளக்குவதைவிட நம் மதம் விதிக்கிறபடியே பூரணமாக வாழ்ந்து காட்டிய உத்தம புருஷர்கள் ஆதியிலிருந்து தோன்றிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். கர்மாநுஷ்டானங்களைச் செய்து கொண்டு, நல்ல தெய்வபக்தியுடனும், எல்லோரிடமும் பிரேமையுடனும், தெளிந்த ஞானத்துடனும், நேர்மையான வாழ்க்கை நடத்திய பெரியவர்கள் நம் மதத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் தோன்றிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இவர்கள் பெரிதாகத் தத்துவப் பிரசாரம் என்று செய்ய வேண்டும் என்பதில்லை. ஆனால் இப்படிப்பட்டவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே இவர்களிடம் பொது ஜனங்களுக்கு மதிப்பு ஏற்பட்டிருக்கிறது! அதனாலேயே இவர்கள் அனுஷ்டிக்கிற மதத்திடம் பற்றுதல் ஏற்பட்டிருக்கிறது. அந்த மதத்தைவிட்டு நீங்காமல் அதிலேயே மேலும் சிரத்தையுடன் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
நாஸ்திகமும் ஸயன்ஸும் லௌகிகமும் தலைதூக்கியுள்ள, இப்போதும் இப்படிப்பட்டவர்கள் நம்மிடை தோன்றிவிட்டால் போதும், நம் மதத்துக்கு எந்த ஹானியும் உண்டாகாது. மதத்துக்கு விரோதமான சக்திகளுடன் பௌதிகமாகவோ, வாத, விவாதத்தாலோ யுத்தம் செய்கிற சைன்யம் ஏதும் நமக்குத் தேவையில்லை. எவரிடமும் யுத்தம் செய்யாமல், எது நடந்தாலும் நடக்கட்டும் என்ற துணிவோடு, தம்பாட்டில் கர்மாநுஷ்டானங்களைச் செய்து கொண்டு, சீலர்களாக வாழ்கிற அஹிம்ஸா ஸோல்ஜர்களே இன்று நமக்குத் தேவை. ‘ஸோல்ஜர்’ என்று ஏன் சொன்னேன் என்றால், அவன்தான் சாகத் துணிந்தவன். அப்படியே இவர்கள் பிராணத் தியாகத்தையும் பொருட்படுத்தாமல், ஸ்வதர்மங்களை அநுஷ்டிக்க வேண்டும். சண்டை போடுவதில் ஸோல்ஜர் இல்லை; சாகத் துணிந்ததிலேயே ஸோல்ஜர். தங்களது வாழ்க்கையின் தூய்மையால் தெய்வீகம் பெற்று, பிறர் அனைவரிடமும் காட்டும் அன்பினால் அவர்களின் மதிப்பைப் பெற்று விளங்கும் இப்படிப்பட்ட சிஷ்டர்கள் நம் மதத்தில் தோன்றிக் கொண்டிருக்கும் வரையில் இருள் தானாக விலகி ஒளிவீசிக் கொண்டேயிருக்கும். சுய ஆசைகள் இல்லாமல், சாஸ்திரம் விதித்த பிரகாரம் கர்மாநுஷ்டானம் செய்யத் தொடங்கினால், தன்னால் கட்டுப்பாடு, சித்தசுத்தி முதலிய குணங்கள் உண்டாகி, ஒவ்வொருவரும் உத்கிருஷ்டமான நிலையை அடையலாம். அனைவரும் அடைய முடியவிட்டாலும் தோஷமில்லை. அனைவருமே இப்படி ஒரு முயற்சி செய்தால்தான் லட்சத்தில் ஒருவராவது உண்மை மகானாக உருவாக முடியும். அப்படி ஒரு சிலர் வந்துவிட்டாலும் போதும். அவர்களைப் பார்த்தே ஜனங்கள் நமது வேத தர்மத்தில் பிடிப்புக் கொண்டு விடுவார்கள்.
பூரணத்துவம் அடைந்த புருஷர்களின் வாழ்க்கை உதாரணத்தாலேயே வளர்ந்து வந்த நமது மதம் இனியும் அப்படியே வளர வேண்டும். நாம் மனப்பூர்வமாக இந்த முயற்சி எடுத்தால், பரமேசுவரன் நிச்சயம் கைகொடுப்பார்! நாஸ்திகம் வந்துவிட்டதே என்று பயப்பட வேண்டாம். நம்மை நாமே சோதித்துக் கொண்டு திருந்துவதற்கே ஈசுவரன் இந்த எதிர்ப்புகளை உண்டாக்குகிறான் என்று உணருவோம். இன்றிருப்பதைவிட மகா பெரிய எதிர்ப்புக்கெல்லாம் ஈடுகொடுத்தது நம் ஸநாதன தர்மம். எதிர்ப்புக் காரணமாகவே, ஆஸ்திகர்களிடத்தில் உண்மையான எழுச்சி உண்டாகி, சமயப் பற்று அதிகமாகியிருக்கிறது. புராண காலங்களில் ராக்ஷஸர் எதிர்த்த கதைகள் ஒருபுறமிருக்கட்டும். சரித்திர காலத்தில்கூட அவைதிக மதங்கள் வலுப்பெற்றபோது எங்கிருந்தோ ஒரு சங்கர பகவத்பாதர் வந்தார்; திருஞான சம்பந்தர் வந்தார். ஔரங்கஜேப் தோன்றி ஹிந்து மதத்தை ஒடுக்கப் பார்த்தார். உடனே ஒரு சிவாஜியும் அஹல்யாபாயும் வந்து நம் சமய உணர்வை முன்னைவிட வலுவாக்குகிறார்கள்! எனவே மதம் என்ன ஆகும் என்ற பயம் வேண்டாம். விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் பகவானுக்கு ‘பயக்ருத்’ (பயத்தைத் தருபவர்) ‘பயநாசன’, (பயத்தைப் போக்குபவர்) என்று அடுத்தடுத்து நாமங்கள் உள்ளன. நம்மை திருத்துவதற்கே ‘பயக்ருத்’ ஆகிறார். நாம் திருந்த முயன்றோமானால் உடனே ‘பயநாசனன்’ ஆவார்.
இந்த முயற்சியில் இறங்குவோம். மதத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பயப்படாமல், மத விரோதிகளைப் பற்றிக் கோபப்படாமல், சண்டையோ வாதமோ செய்யாமல் அவரவரும் நம் மத விதிகளை நாம் அநுசரித்து நடக்கச் சங்கல்பம் செய்து கொள்வோம். “எங்கள் மதத்தில் இன்னின்ன கர்மங்களையும் தர்மங்களையும் சொல்லியிருக்கிறது” என்று வாதப் பிரதிவாதம் செய்வதோடு திருப்தி அடையாமல், “எங்கள் மதத்தில் சொன்ன கர்மங்களையும் தர்மங்களையும் பூரணமாகச் செய்துகாட்டுகிற சீலர்களை இதோ பாருங்கள்” என்று காட்டக்கூடியவாறு உத்தமப் பிறவிகள் தோன்ற முயற்சி செய்வோம். இவ்வாறு ஒவ்வொருவரும் வேத மதத்தின் அஹிம்ஸா ஸோல்ஜராவதற்கு முயல்வோம். ஸோல்ஜர் தன் தேசத்தின் நிலத்தில் ஒரு அங்குலம்கூட எதிராளிக்கு விடமாட்டான் அல்லவா? அப்படியே நம் சாஸ்திர வழக்கங்களைக் கொஞ்சம்கூட விடாமல் தைரியத்தோடு நம் தர்மத்தை ரக்ஷிக்கப் பிரயாசை எடுப்போம். நாம் அந்தரங்க சுத்தமாக முயற்சி எடுத்தால் ஈசுவரன் நமக்கும் நம் ஸநாதன தர்மத்துக்கும் குறைவு வராமல் அநுக்கிரகிப்பார்.
வையகம் துயர் தீர வழி
சென்ற ஐம்பது வருஷங்களுக்குள் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. விஞ்ஞான, பொருளாதார, அரசியல், சமூக விஷயங்கள் எல்லாவற்றிலும் பெரிய மாறுதல்கள் உண்டாகிவிட்டன. அதற்குமுன் ஐயாயிரம் வருஷங்களில் ஏற்பட்ட மாறுதல்களைவிட இந்த ஐம்பது வருஷ மாறுதல்கள் அதிகம் என்றே சொல்லலாம். இந்த ஐம்பது வருஷ மாறுதல்களிலிருந்து நமக்கு ஏற்பட்ட அநுபவம் மிகப் பெரியது. இவ்வளவு அநுபவங்களினின்றும் ஒரு விஷயம் மாத்திரம் தீர்மானமாகத் தெரிகிறது. மனிதர்கள் எவ்வளவுக்கெவ்வளவு பகவானிடத்திலிருந்தும் தர்ம நூல்களினின்றும் விலகுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்றே கண்கூடாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம். ஸயன்ஸின் அபரிமித அபிவிருத்திக்குப் பிற்பாடு இன்று சர்வ தேசத்திலும் ஒரு தத்தளிப்பு, நிம்மதியின்மைதானே அதிகரித்திருக்கிறது? ஐம்பது வருஷத்துக்குமுன் சமுதாயத்தில் இருந்த நிச்சிந்தையான, நிம்மதியான, சௌஜன்யமான வாழ்க்கை இப்போது இல்லவே இல்லை என்கிறது தானே மிஞ்சி நிற்கிறது? அறிவுச் சக்தியோ பௌதிக ஆற்றலோ அதிகப்பட அதிகப்பட உலகத்துக்கு ஆபத்தும் அதிகரிக்கிறது என்று நன்றாகத் தெரிகிறது.
சரி, வியாதியைத் தெரிந்து கொண்டோம். இனி மருந்து என்ன? பக்தியும் சாந்தமுமே இவைகளுக்கெல்லாம் உற்ற மருந்து. உண்மை பக்தியும் சாந்தமும் உலகில் பரவப்பரவப் போலீசுக்கும், நீதிமன்றங்களுக்கும், சைன்யங்களுக்கும் வேலை குறையும். இதுதான் முந்தைய ஐயாயிரம் வருஷம் காட்டுகிற உண்மை.
ஆதலால், ஆட்சி மன்றத்தின் முதற்கடமை பக்தியையும் சாந்தத்தையும் பரவச் செய்வதே.
ஆனால் நடப்பது என்ன? ஆட்சி மன்றத்தினரோ தாம் மதச் சார்பற்றவர்கள் என்று தீர்மானித்துக் கொண்டிருக்கிற படியால் பக்திப் பிரசாரம் அத்தீர்மானத்திற்கு மாறுபட்டதாகி விடுமோ என்று சந்தேகித்து, இவ்வழி திருப்பாமலிருக்கிறார்கள். மதச்சார்பின்மை என்றால் ஒரு மதத்தை மட்டும் சாராமல் எல்லா மதங்களையும் வளர்ப்பது என்று வைத்துக் கொள்ளாமல், எந்த மதத்தையுமே வளர்ப்பதில்லை என்று அர்த்தம் பண்ணிக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட விளைவு இது. அவ்வப்போது நெறிபோதனை (moral instruction) , மத போதனை (religious instruction) என்றெல்லாம் அரசியல்வாதிகள் பெரிதாகப் பேசி, ஒவ்வொன்றுக்கும் கமிட்டி, கிமிட்டி போட்டு, அதுவும் ஊரெல்லாம் சுற்றி, ஆயிரம் பத்தாயிரம் பக்கம் ‘ரிப்போர்ட்’ சமர்ப்பிக்கிறது. ஆனாலும் கடைசியில் காரியத்தில் ஏதாவது அமல் ஆயிற்றா என்று பார்த்தால் ஸைபர்தான். கலாச்சாரம், பண்பாட்டு வளர்ச்சி என்று செய்கிற காரியங்களும் வெறும் கூத்தும், பாட்டுமாக, வெறும் ‘ஷோ’ வாக முடிந்து போகின்றன.
சர்க்கார் எப்படியிருப்பினும் மக்களில் அறிந்தோருடைய கடமை மக்களுக்கு உண்மையாக நலனைக் கோருவதே; அவர்களை உயர்த்தப் பாடுபடுவதே. மக்களுக்கு உண்மையான நலன், நம்மை விட்டுப் பிரிய முடியாத பேர் உறவினனான ஆண்டவனிடம் அன்பு செலுத்துவதனாலேயே வளரும். பக்தி போனதிலிருந்து க்ஷேமமும் போய்விட்டதென்பதே ஐம்பதாண்டுகளில் நமக்கு ஏற்பட்ட அநுபவத்தின் ஸாரம்.
ஒவ்வொரு ஊரிலும் அநேக சங்கங்கள், மன்றங்கள், கழகங்கள், குழுக்கள் நிறுவப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குறிக்கோள் உண்டு. இவை ஒவ்வொன்றும் பற்பல சமயங்களில் மற்றவர்களுடன் முரண்பட்டு ஊரிலும் நாட்டிலும் வெறுப்பு, கசப்பு, புரட்சி முதலியவைகளுக்குக் காரணமாக முடிகிற நிலைக்குக் கொண்டு விடுவதையும் நிறையப் பார்க்கிறோம். ஆதலால் எல்லாக் கசப்பையும் இனிப்பாக மாற்றக்கூடியதும், எல்லாப் புரட்சிகளையும் அன்பாக மாற்றக்கூடியதுமான, ஒரு கழகம் நமக்குத் தேவையாகிறது. பக்தி மார்க்கம் என்னும் வழிபாட்டைப் பரப்பும் கழகங்களே இவை. இந்த வழிபாட்டுக் கழகங்களே இப்போதும், எப்போதும் தேவை. மற்ற எல்லா வாழ்க்கை அம்சங்களையும், மற்ற எல்லாக் கழகங்களையும் சாந்தமுறையில் சீர்படுத்தும் சாதனம் வழிபாட்டுக் கழகங்களே.
எனவே நம் தேசத்திலுள்ள அத்தனை லக்ஷம் கிராமங்களிலும் சாந்தம் பரவ, ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு வழிபாட்டுக் கழகம் நிறுவ வேண்டும். நாம் எல்லோரும் முனைந்து முயற்சி செய்து ஈசன் அருளைத் துணை கொண்டு, இப்பணியை முடித்தாக வேண்டும். இதனால் நாமும் சீர்ப்பட்டு நாடே அன்பு மயமாகும். நம் ஒரு நாட்டின் உதாரணத்தின் மூலம் உலகமும் சாந்தியாகி, “லோகா: ஸமஸ்தாஸ் ஸுகினோ பவந்து”, “வையகம் துயர் தீர்க்கவே” என்ற நமது வேத நெறியின் சிறப்புக் கொள்கை புத்துயிர் பெற்று நிலவும்; நாம்தான் அப்படி நிலவ வைக்கவேண்டும். இப்பணிக்கே நம் ஆயுளை அர்ப்பணிக்க வேண்டும்.
நவீன விஞ்ஞான வளர்ச்சிகளாலோ, பணவீக்கம் முதலியவைகளாலோ, பரஸ்பர அவநம்பிக்கைகளாலோ ஏற்படக்கூடிய எந்தப் புரட்சியையும் வெகு சாந்தமான முறையில் சமாளிக்கக்கூடிய வழிபாட்டுக் கழகங்களை நிறுவும் பணியில் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு, எஞ்சியிருக்கும் நமது வாழ்நாட்களை இதிலே பயன்படுத்தித் தொண்டு புரிவோமாக! “நம் கடன் பணி செய்து கிடப்பதே!”