வேத நெறியை வாழ்விப்பவன்
ஸ்கந்த மகாபுராணம்தான் புராணங்களுக்குள்ளேயே மிகப் பெரியது. ஏறக்குறைய ஒன்றரை லட்சம் சுலோகம் கொண்டது. உலகத்திலேயே இருப்பதற்குள் மிகப் பெரிய கிரந்தம் அதுதான் எனலாம். இப்படிப்பட்ட ஸ்காந்தம், இன்னம் வால்மீகி ராமாயணம், காளிதாஸரின் குமார ஸம்பவம் எல்லாம் ஸுப்ரம்மண்யர் பெருமையைச் சொல்கின்றன. ‘குமாரகுப்தன்’ என்கிற மாதிரி, பழைய ஆரியாவர்த்த ராஜாக்களின் பேர் சுப்ரம்மண்ய பரமாக இருக்கிறது. ரொம்பப் பழங்கால நாணயங்களில்கூட – வட இந்தியாவின் மூலைக் கோடிகளில் கண்டெடுக்கப்பட்டவற்றில் – மயூர வாகனராகக் குமாரஸ்வாமி இருக்கிறார். இப்போது பாகிஸ்தானுக்குப் போய்விட்ட எல்லை மாகாணத்தில் (North – West Frontier) கண்டெடுத்த குஷானர் நாணயங்களில் குமாரஸ்வாமி உருவம் பொறித்திருந்தது. வடபுலத்தின் பல ராஜ வம்ஸங்கள் அவரை ‘ப்ரம்மணிய குமாரர்’ என்று குலதெய்வமாகக் கொண்டிருக்கின்றன. அந்த ராஜாக்கள் தங்களையும் ‘ப்ரம்மண்யர்’கள் என்றே சொல்லிக் கொள்வார்கள். ‘ஸுப்ரம்மண்ய’த்தின் முதல் எழுத்தைத் தள்ளினால் ‘ப்ரம்மண்யம்’ தானே நிற்கிறது? இங்கே நம் தமிழ் நாட்டில் வேதத்துக்கும் சமஸ்கிருதத்துக்கும் ரொம்பத் தொண்டு செய்திருக்கிற காஞ்சிப் பல்லவ ராஜாக்களும், தங்களை சிவ பக்தியில் சிறந்த ‘பரம மாஹேசுவரர்களாகவும்’ விஷ்ணு பக்தியில் சிறந்த ‘பரம பாகவதர்’களாகவும் சொல்லிக் கொள்வதோடு, ஸ்கந்த உபாஸனையை விசேஷமாகச் செய்த ‘பரம ப்ராம்மண்யர்’களாகவும் வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள். சாஸனங்களில் இவற்றைப் பார்க்கிறோம்.
எல்லாவற்றுக்கும் முற்பட்ட வேதத்தில் போற்றப்பட்ட ஸ்வாமியாக அவர் இருக்கிறார். ரிக்வேத பஞ்ச சூத்திரத்தில் “தகப்பன் சாமி” யைப் பற்றிய பிரஸ்தாவம் வருகிறது. பரமேசுவரனைப் போற்ற வந்த இந்த வேத ஸூக்தத்தில் ஒரு மந்திரம் ‘குமாரனை வணங்குகிற பிதா’ என்று அவரைக் கொண்டாடுவது அதிவிசேஷம். சாந்தோக்ய உபநிஷத்தில் ஸனத்குமார – ஸ்கந்தரைப் பற்றி வருகிறது. பாணினியின் வியாகரணம், அதற்குப் பதஞ்சலி செய்த மஹா பாஷ்யம் எல்லாவற்றிலும் ஸ்கந்தன், விசாகன் என்ற பெயர்களில் முருகனைப் பற்றிப் பிரஸ்தாவம் உண்டு.
போதாயன தர்ம சூத்திரத்தில் தினமும் செய்ய வேண்டிய வேத தர்பணங்களில் ஸ்கந்தனும், அவனது பார்ஷதரும் (பரிவாரங்களும்) இடம் பெறுகிறார்கள்.
தமிழபிமானம் உள்ளவர்களுக்கு இதை எல்லாம் சொல்ல வேண்டும். ஏனென்றால், தமிழ் மொழிக்கே முருகன்தான் அதிஷ்டான தெய்வம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்! ‘முருகன்’ என்று அலாதி அன்பு சொட்டச் சொல்வது தமிழர்களுக்கே உரிய பெருமை. ஆதிகாலம் தொட்டு இங்கு குறிஞ்சி நிலக்கடவுளாக அவரை வழிபட்டு வருகிறோம். தொன்மையிலும் தொன்மையான தொல்காப்பியம் இதை ‘சேயோன் மேய மைவரை உலகமும்’ என்கிறது. ஆறுபடை வீடுகள் என்று பிரசித்தமான சுப்ரம்மணிய க்ஷேத்திரங்கள் தமிழ் தேசத்தில்தான் இருக்கின்றன. அவர் தமிழை உண்டாக்கியவர், வளர்த்தவர். சங்கப்புலவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். அகஸ்தியருக்குத் தமிழிலக்கணம் உபதேசிக்கிறார். மிகப் பழய சங்க காலத்திலேயே நக்கீரர் இவர் மீது ‘திருமுருகாற்றுப்படை’யைப் பாடியிருக்கிறார். பலர் அதைப் பாராயணம் செய்தே கைகண்ட மருந்தாகப் பலன் அடைந்திருக்கிறார்கள். முன்னொரு முறை நம் மடத்துத் துவாரா மூலமாக ஒரு வைகாசி விசாகத்தின்போது இந்தத் திருமுருகாற்றுப்படையும், விநாயகர் அகவலையும் நிறைய அச்சுப் போட்டு எல்லோருக்கும் அன்பளிப்பாக வழங்கினோம் – விநாயக சதுர்த்திக்குள் இவற்றை மனப்பாடம் செய்ய ஒப்புக் கொண்டவர்களுக்கு. காவடி எடுப்பது, கிருத்திகா விரதம், சஷ்டி உபவாஸம் இருப்பதெல்லாம் தமிழ் நாட்டுக்கே விசேஷமானவை.
இதனாலெல்லாம் முருகனைத் ‘தமிழ்த் தெய்வம்’ என்று குறிப்பாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் இந்தக் காலத்தில் தமிழ் மதம் வேறு, வேதநெறி வேறு என்று பேதம் செய்வதில் சிலருக்கு ருசி இருந்து வருகிறது. இது ஆராய்ச்சி என்று சொல்லிக் கொண்டு நம் ஜனங்களை பேதப்படுத்துவதற்காக வெள்ளைக்காரர்கள் செய்த விஷமத்தின் அனர்த்தமான விளைவு. வேத மதம்தான் என்றைக்கும் தமிழ் மதமாக இருந்திருக்கிறது என்பதுதான் என் அபிப்பிராயம். அந்த விவாதம் இப்போது வேண்டாம். குமாரஸ்வாமி ஒருத்தரை எடுத்துக் கொண்டால், ‘இவர் தமிழ் தெய்வம்’ என்கிற போது, ‘வேதத்திலும் தமிழ்நாட்டுக்கு வெளியிலும் இவர் ஆதியில் கிடையாது’ என்ற தப்பபிப்ராயம் ஏற்படக்கூடாது என்பதற்கே, ரிக்வேத காலத்திலிருந்து ராமாயணம், அப்புறம் புராண காலம், காளிதாஸன் காலம், குப்தர்கள் முதலிய ராஜாக்களின் காலம் எல்லாவற்றிலுமே பாரத தேசம் முழுக்க அவர் பெருமை பரவியிருந்திருக்கிறது என்று காட்ட வந்தேன்.
வைதிக நெறியை வளர்க்கவே ஏற்பட்ட ஸ்வாமி அவர் என்பதற்கு “ஸுப்ரம்மண்யர்” என்ற பெயரே போதும் என்று சமநிலையிலிருந்து (Un – biassed) பார்த்தால் தெரியும். பிரம்மண்யத்தை – அந்தணர்கள் பற்றி ஒழுகுகிற வேத நெறியை – வளர்க்கிறவர் சுப்ரம்மண்யர் என்பது வெளிப்படை.
வேதத்துக்கு முக்கியம் வேள்வி, யாகம். வேள்விக்கு முக்கியம் அக்னி. தெய்வங்களுக்குள் சுப்ரம்மண்யர்தான் அக்னி ஸ்வரூபமானவர். அவருக்குப் பஞ்சபூத சம்பந்தமும் உண்டு. ஆகாச ஸ்வரூபமான ஈசுவரனின் கண்களிலிருந்து நெருப்புப் பொறியாகத் தோன்றி, வாயுவும், அக்னியும் அவரைச் சுமந்து கங்கையிலே சரவணப் பொய்கை என்ற நீர் நிலையில் விட, அவர் அங்கே ஷண்முகராகி, பிறகு பூமி உச்சமாக எழுப்புகிற மலைச்சிகரங்களிலெல்லாம் கோயில் கொண்டிருக்கிறார். இப்படிப் பஞ்சபூத சம்பந்தமிருந்தாலும் அவர் அக்னிச் சுடராகவே பிறந்தவர். அக்னியில் பிறந்தவர் – “அக்னி பூ” – என்றும் அவருடைய பெயர் வரிசையில் அமரகோசம் சொல்லிக் கொண்டு போகிறது.
ஸேநானீ: அக்னி: பூ குஹ:
குகையில், நம் இருதய குகையில் ஆத்ம ஸ்வரூபமாக அரூபமாக இருக்கிற குகன், இப்படி வெளிப்பட்ட பஞ்சபூதங்களில் இருந்தாலும், முக்கியமான அக்னி ஸ்வரூபியாக இருப்பதால் அவர் அக்னியாராதனையை மையமாகக் கொண்ட வேதப் பிரதிபாத்யமான தேவதையே ஆவார்.
வேதநெறி க்ஷீணித்தால் அதைப் புணருத்தாரணம் பண்ணுவதே சுப்ரம்மண்ய ஸ்வாமிக்கு முக்கியமான காரியமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு முறையும், வட தேசத்தில் ஒரு முறையும் இப்படிப் புறச் சமயங்களை வென்று வைதிகத்தை ஸ்தாபிக்கவே அவர் இரு அவதாரங்கள் செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட அவதாரம் ஞானசம்பந்தர், பரமேசுவரனோ, முருகனோ அவதாரம் செய்ததாகச் சொன்னால் இழுக்கு என்று நினைக்கிற சித்தாந்திகள் இருக்கிறார்கள். கர்ப்பவாஸம் செய்தால் நிஷித்தம் என்பது அவர்கள் கருத்து. ‘விஷ்ணுதான் அவதரிப்பவர், எங்கள் ஸ்வாமியான சிவபெருமான் பிறவாயாக்கை’ என்பார்கள். ஆனால், அத்வைதிகளுக்கு எல்லா ஸ்வாமியும் ஒன்றுதான். ஜீவாத்மாவும் பரமாத்மாவும்கூட ஒன்றுதான். இத்தனை ஜீவர்களாக அந்தப் பரமாத்மா கர்ப்பவாஸம் பண்ணி வெளி வந்திருப்பதையே இழுக்காக நினைக்காமல் இவனிடம்கூட ‘நீயும் பிரம்மம் தானப்பா’ என்று சொல்வது நம் கொள்கை. தப்புப் பண்ணுகிற ஜீவர்களை ரக்ஷிப்பதற்காக, ஒரு பாபமும் தொடமுடியாத ஸ்வாமி அவர்களில் ஒருத்தராகப் பரம கருணையுடன் அவதரிப்பதாகச் சொல்வது அவருக்குப் பெருமை தருவதாகவே நமக்குத் தெரிகிறது. அருணகிரிநாதரைவிடப் பெரிய முருகனடியார் இருக்க முடியாது. அவரே திருப்புகழில் முருகனை “உறை புகலியூரில் அன்று வருவோனே” என்கிறார். புகலியூர் என்பது சீர்காழி. ஞான சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் சீர்காழியில்தான் அவதாரம் செய்தார்.
ஞானசம்பந்தர் எதற்கு அவதரித்தார் என்பதைச் சேக்கிழார், “வேதநெறி தழைத்தோங்க” என்று சொல்கிறார். சமணர்களை வாதில் வென்று பிரம்மண்யத்தை நிலைநாட்டினவர் ஞானசம்பந்தர். தமிழ் வேதமான தேவாரம் பாடிய அவரும் தம்மை “நான்மறை ஞானசம்பந்தன்” என்றே சொல்லிக் கொள்கிறார். இந்த மறைகளை, மறை கூறும் யாகாதி கர்மாக்களை வாழ்த்தி வளர்ப்பது முருகனுக்கே ஏற்பட்ட ஒரு விசேஷமான காரியம் என்று, ‘திருமுருகாற்றுப்படை’யும் சொல்கிறது.
தொன்மை வாய்ந்த பத்துப்பாடலில் முதலாவதாக இருக்கிற நூல் அது. தமிழ்நாட்டில் குறவரினத்திலிருந்து சகல சமுதாயத்தினரும் சுப்ரம்மண்யரை எப்படி எப்படி வழிபட்டார்கள் என்பதை அது சொல்கிறது. நக்கீரர் அதில் ஷண்முக நாதனின் ஆறுமுகங்களில், ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு விசேஷமான காரியத்தைச் சொல்கிறபோது,
ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழா அது
அந்தணர் வேள்வி ஓர்க்கும் மே
(மந்திர விதி தப்பாமல், வைதிக சம்பிரதாயப்படி பிராமணர்கள் செய்கிற யாகங்களைக் கண்டு இன்புற்று அவற்றை வளர்க்கவே முருகனுக்கு ஒரு முகம் இருக்கிறது) என்றார்.
முருகனின் தமிழ்நாட்டு அவதாரம்
இந்தக் காலத்தவர்களுக்குச் சில புதுக் கொள்கைகளில் ரொம்பவும் அபிமானம் இருக்கிறது. அதற்காக, பழங்காலத்தில் இருந்தவர்களையும் தங்கள் கொள்கைப்படி நடந்தவர்களாகக் காட்ட வேண்டும் என்று நினைத்து, அவர்கள் அபிப்பிராயங்களை மாற்றிச் சொல்லக்கூடாது. பிடிக்கிறவர்கள் புதுக் கொள்கைகளை வைத்துக் கொள்ளட்டும்; ஆனால், நம் பூர்விகர்கள்மீது இவற்றைச் திணிக்கக்கூடாது. முருகன் வேத மதத்தில் இல்லாதவன், தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் உரியவன், இங்குதான் ஆதி (ஒரிஜினல்) யில் இருந்தவன் என்பது ஒரு புதுக் கொள்கை.
யாகம் செய்கிற வேதியர்கள் தொழுகிற தெய்வம் என்று திருப்பரங்குன்றத்தில் இருக்கிற முருகனை சங்க நூலான திருமுருகாற்றுப்படை சொல்கிறது. முருகன் அவதாரமான ஞானசம்பந்தர் தாம் வேதத்தை வளர்க்கவே வந்ததாகச் சொல்லிக் கொள்கிறார். “வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி யமண்” என்றும், “மறை வழக்கமிலா மாபாவியர்” என்றும் சம்பந்தரே சொல்லியிருக்கிற சமணர்களை வென்று மறுபடி வைதிக தர்மத்தை நிலைநாட்டத்தான் அவர் அவதாரம் பண்ணினார். ஸாக்ஷாத் அம்பாளுடைய க்ஷீரத்தை சம்பந்தர் பானம் பண்ணினார் என்பதே அவர் அவளுடைய நேர்ப்பிள்ளையான ஸுப்ரம்மண்யம் என்பதற்கு அத்தாட்சி. பிரம்மண்யத்தை – வைதிக தர்மத்தை – வாழ வைப்பதே தம் லட்சியம் என்பதாலேயே “வாழ்க அந்தணர்” என்ற தேவாரப் பாடலால் முடிந்த முடிவாகச் சமணரை ஜயித்தார். அந்தத் கதையைச் சொல்கிறேன்.
சமணர்களுக்கு அவர் அறிவு ரீதியில் வாதம் செய்து ஜயித்தது போதவில்லை. பாண்டிய ராஜாவுக்குத் திருநீற்று மகிமையால் வெப்பு நோய் தணித்ததும் போதவில்லை. தானாகவே உடம்பு குணமாயிருக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ? மறுக்க முடியாத அற்புதத்தால் மதத்தை நிலைநாட்டப் பரீட்சை வைத்தார்கள். அதாவது அனல்வாதம், புனல்வாதம் செய்யவேண்டும் என்றார்கள். இரு கட்சிக்காரர்களும் தங்கள் தங்கள் கொள்கைகளைச் சுவடியில் எழுதி நெருப்பில் போடவேண்டும். எந்தச் சுவடி எரியாமல் இருக்கிறதோ, அதில் இருக்கிற தத்வமே சத்தியம் என்பது அனல் வாதம். ஆற்று ஓட்டத்தில் இரு தரப்பினரும் தங்கள் சுவடிகளை விட வேண்டும். எது பிரவாகத்தின் கதியை எதிர்த்து மறு திசையில் செல்கிறதோ அதுவே உண்மை என்பது புனல் வாதம். முதலில் அனல் வாதத்தில் சம்பந்த மூர்த்தி ஸ்வாமிகளே ஜயித்தார். அப்புறம் புனல் வாதம்.
ஜைனர்கள் ‘விப்ர க்ஷயம்’ என்று சுவடியில் எழுதி ஆற்றில் போட்டதாகச் சொல்கிறார்கள். ‘விப்ர க்ஷயம்’ என்றால் ‘பார்ப்பானே ஒழிக’ என்று அர்த்தம். வேத வேள்விகள் பரம அஹிம்ஸாவாதிகளான சமணர்களுக்கு விரோதமானதால் இப்படி எழுதி வெள்ளத்தில் போட்டதாகச் சொல்கிறார்கள். அது முழுகிப் போயிற்று.
அப்புறம் சம்பந்தர் ஒரு தேவாரப் பாடலை எழுதிப் பிரவாகத்தில் போட்டார். அந்தச் சுவடியோ அலையோட்டத்தை எதிர்த்துக் கொண்டு கன ஜோராகச் சென்றது. குலச்சிறையார் என்கிற பாண்டிய மந்திரி குதிரையில் ஏறி, கரையோடு அந்த ஏடு போகிற திசையில் வேகமாகச் சென்றார். அப்புறம் சம்பந்தர் ஒரு பதிகம் பாடி அதை நட்டாற்றில் நிற்கச் செய்தார். குலச்சிறையார் அந்த ஏட்டை ஒரே சந்தோஷத்துடன் எடுத்துக் கொண்டு கரை சேர்ந்த இடம் இப்போது “திருவேடகம்” (திரு ஏடு அகம்) என்று வழங்குகிறது. இதுவே, சம்பந்தரின் முடிவான வெற்றி. புனலை எதிர்த்துப் போன அந்த ஏட்டில் சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் என்ன எழுதியிருந்தார்?
“வாழ்க அந்தணர்” என்றே ஆரம்பிக்கிறது அந்தத் தேவாரப் பாடல். வேதம் இருந்தால்தான், பிரம்மண்யம் இருந்தால்தான் லோகத்துக்கு, க்ஷேமம் என்பதில் சம்பந்தருக்குக் கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை; அதற்கு உபகரிப்பதே தம் ஜன்மவிரதம் – அவதார காரியம் – என்று தயங்காமல் வெளியிட்டார் என்பது இதிலிருந்து தெரிகிறது. நவீன காலத்தில் சிலருக்கு இந்தக் கொள்கை பிடிக்காமலிருக்கலாம். ஆனால், சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளுக்கு அதில் நிச்சயமான உறுதியிருந்தது என்பதை ஆட்சேபிக்க முடியாது.
அது சரி; ஆனால், வேதத்தை ஓதிக் கொண்டு, யாகம் செய்து கொண்டிருக்கிற ஒரு கூட்டம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு மகான் நினைப்பாரா? சர்வ ஜனங்களும் சமஸ்தப் பிராணிகளும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் மகானின் ஸதா கால நினைப்பாக இருக்கும். ஞான சம்பந்தர் மேலே சொன்ன பாடலை இப்படித்தான் ஆசீர்வாதம் செய்து முடிக்கிறார்:
வையகமும் துயர் தீர்கவே
“லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து” என்பது தமிழ்க் குழந்தையின் அருகில் இப்படி அருள் சொட்ட வெளிவந்திருக்கிறது. சரி, வையகம் என்றால் அதில் எல்லா ஜீவராசிகளும் ஜாதிகளும் அடக்கம்தானே? அப்படியானால் வையகம் முழுவதும் துயர் தீருகிறபோது, தானாகவே அதிலிருக்கிற அந்தணர்களும் வாழ்ந்து விட்டுப் போகிறார்கள். அவர்களை எதற்கு, வையகத்தைச் சேராதவர் மாதிரி தனியாகப் பிரித்து, முதல் ஸ்தானம் கொடுத்து, “வாழ்க அந்தணர்” என்று சொல்ல வேண்டும்? பிராம்மண ஜாதியில் பிறந்ததால் சம்பந்த மூர்த்தி ஸ்வாமிக்குத் தனி அபிமானமா? ஒரு மஹானுக்கு இப்படி சின்ன அபிமானங்கள் இருப்பதாகச் சொல்வது நன்றாகவேயில்லையே!
லோக க்ஷேமம்தான் அவருக்கு லக்ஷ்யம். ஆனால், அதற்கு சாதனம் வேத யக்ஞங்கள்தான். இதனால்தான் வேத கர்மாக்களைச் செய்கிறவர்களைத் தனியாகப் பிரித்து முதலில் சொன்னார். – பட்சபாதம் இல்லை.
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
வானவர்களான தேவர்களுக்கு யக்ஞத்தில் ஆஹுதி கொடுத்தால்தான் மழை பெய்யும் – தண்புனல் வீழும். மழை பெய்து தானிய சுபிக்ஷம் உண்டானால்தான் ராஜாங்கம் செழிக்கும் – வேந்தன் ஓங்குவான். நடுவே ‘ஆனினம்’ என்று ஏன் தனியாகச் சொல்லியிருக்கிறது? முடிகிறபோது ‘வையகம்’ என்று சொன்னதில் இதுவும் அடக்கம்தானே?அந்தணரைத் தனியாக சொன்னதற்குக் காரணம், அவர்கள் செய்கிற யாக கர்மா என்று சொன்னீர்கள்; சரி, ‘பசுக்களை – ஆனினத்தை – தனியாகச் சொன்னது ஏன்?’ என்று கேட்பீர்கள். லோகோபகாரம் செய்ய வேண்டும் என்கிற பரம நியமங்களுடன் வாழ்ந்து வேதங்களைச் சொல்லி ஆஹுதி செலுத்தி யாகத்தைச் செய்பவர்கள் என்பதால் அந்தணர்களைச் சொன்னது போலவேதான், யாகத்தில் ஆஹுதியாகிற நெய்யையும் பாலையும், எரிப்பதற்கு உதவுகிற சாணத்தையும் தருகிறது, என்பதாலேயே ஆனினத்தைத் தனியாக குறிப்பிட்டார். ஆக தனியாக இவை மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஓரவஞ்சனையில்லை. வையகம் துயர்தீர உதவியாக நடைபெற வேண்டிய வேள்விக்கு உதவி செய்வதாலேயே தனியாக வாழ்த்தினார். லோகோபகாரமாக வேத கர்மத்தைச் செய்வதற்காகத்தான் அந்தணரை வாழ்த்தினார். அந்தக் கர்மாவை விட்டுவிட்டவர்களுக்கு இந்த வாழ்த்து இல்லை; அப்படிப்பட்டவர்களுக்கு நானும் வக்காலத்து வாங்க வரவில்லை.
எங்கு பார்த்தாலும் வேள்விகள் நடந்து வேத நெறி விருத்தியானால், தீயதெல்லாம் தீய்ந்துபோகும் என்பது சம்பந்தர் சித்தாந்தம் என்று தெரிகிறது.
ஆழ்க தீயதெல்லாம் ! அரன் நாமமே
சூழ்க ! வையகமும் துயர் தீர்கவே !
என்று, பின் இரண்டு வரிகளில் பாடுகிறார்.
வேதநெறி என்பது ஒரு பெரிய ஆறு; ஒரு ஆற்றிலேயே பல படித்துறைகள் இருப்பதுபோல், வேத நெறியில் சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்று பல இருக்கின்றன. இவற்றுள் “மிகு சைவத்துறை விளங்க” வந்தவர் ஞானசம்பந்தர் என்கிறார் சேக்கிழார். அதனால், வேத தர்மம் தழைத்தோங்குகிறபோது, எங்கு பார்த்தாலும் சிவபெருமானின் நாமமே – ஒலிக்க வேண்டும் என்கிறார். இப்படியிருந்தால் வையகத்தில் – ஒரு ஜாதிக்கு மட்டும் இல்லை என்பதோடு நம் பாரத தேசத்துக்கு, ஹிந்து சமூகத்துக்கு மட்டும் இல்லை; உலக முழுவதிலுமே – ஒரு கஷ்டம் இல்லாமல் எல்லோரும் ஆனந்தமாயிருப்பார்கள் என்கிறார்.
இந்த லோக க்ஷேம லக்ஷியத்துக்காகவே சிலர் யக்ஞாதிகளைச் செய்ய வேண்டும் என்று அவர்களை விசேஷமாக வாழ்த்தினார். அவர்களுடைய தர்மத்தை நிலைநாட்டித் தருவதே அவரது அவதார காரியமாக இருந்தது.
வேத தெய்வமாகக் இருந்துகொண்டு, பர மதங்களை நிராகரித்து, மறைவழக்கை நிலைநாட்டுவது சுப்ரம்மண்யரின் அவதார காரியம் என்பது இதிலிருந்து தெரிகிறது.
வடக்கே ஏற்பட்ட ஸுப்ரமண்ய அவதாரத்தைப் பற்றிச் சொல்கிறேன்.