காமாக்ஷியின் கண்கள்
நம் அவயவங்களில் கண் மிகவும் முக்கியம். ‘என் கண்ணே’ என்று பிரியமானவர்களைச் சொல்கிற மாதிரி ‘காதே, மூக்கே’ என்பதில்லை அல்லவா? அம்பாள் என்பதாகப் பரமாத்மா மூர்த்திகரிக்கிறபோது அவளுடைய கண் எத்தனை முக்கியமாகும்? காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி என்கிறபோது அக்ஷி என்பது அவளது கண் விசேஷத்தையே சொல்கிறது.
காமாக்ஷியின் கைகளில் மன்மதனின் வில்லும் அம்பும் இருப்பதாகச் சொல்கிறோம். அவளுடைய கைகளில் மட்டுமில்லை, கண்களிலும்கூட இவையே இருக்கின்றன என்று ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் கவித்வ நயத்தோடு சொல்கிறார். (‘ப்ருவெளபுக்நே கிஞ்சித்’ என்கிற ஸ்லோகம்)
என்ன சொல்கிறார்? அம்பாளுடைய புருவம் கொஞ்சம் நெரிந்திருக்கிறதாம். கவலை இருந்தால்தான் புருவம் நெரியும். லோக மாதாவுக்கு ஜனங்கள் எல்லோரும் கெட்டுப்போகிறார்களே, அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கவலை. அதனால் புருவம் வளைந்திருக்கிறது. அம்பாளுடைய பரம லக்ஷணமான புருவங்கள் வில் மாதிரி இருக்கின்றன. இரண்டு வளைந்த பாகங்களைக் கொண்ட தனுஸைப் போல் அவை உள்ளன. ஆனால் புருவ மத்தியில், அதாவது நாசி தொடங்கும் இடத்துக்கு மேலே ரோமம் இல்லை. ரோமம் இருந்தால் அது உத்தமமல்ல! சாமுத்திரிகா லக்ஷணம் ஆகாது. கூடின புருவம் கெடுதல் உண்டாக்கும் என்பார்கள். அம்பாளுடைய புருவங்களின் மத்தியில் ரோமமில்லாதது உத்தம ஸ்திரீ லக்ஷணம்தான். ஆனால் இது புருவங்களை வில்லுக்கு உவமிக்கும்போது அவ்வில்லுக்கு நடுவே ஊனம் செய்தாற்போல் தோன்றலாம். அப்படி ஊனம் தோன்றாமல் ஆசார்யார் ஒரு காரணம் சொல்கிறார். வில் என்று ஒன்று இருந்தால், அதை எய்கிறவன், அதன் மத்தியில் தன் முஷ்டியால் அதைப் பிடித்துக் கொண்டுதானே நாணில் அம்பு பூட்டி இழுப்பான்? முஷ்டி பிடித்திருக்கிற இடம் வில்லின் இரண்டு பாகங்களுக்கு மத்தியில் அந்த வில்லை மறைக்கத்தானே செய்யும்? இப்படித்தான் அம்பாளின் புருவ வில்லையும் எவனோ மத்தியில் பிடித்துக்கொண்டு அம்பைப் பூட்டுகிறான். அவனுடைய முஷ்டி உள்ள அந்த மத்ய பாகம்தான் ரோமம் இல்லாத இடைவெளி என்கிறார்.
இப்படி அம்பாளின் புருவத்தை வில்லாக வளைப்பவன் யார்? மன்மதன்தான். அவனுடைய கரும்பு வில் போலத்தான் கருணையால் வளைந்த லோக மாதாவின் புருவம் இருக்கிறது. மன்மதனுடைய வில்லுக்கு வண்டுகள் தானே நாண் கயிறு. அதற்கேற்றாற்போல் இந்த புருவத்துக்குக் கீழே அம்பாளுடைய வண்டு விழிகள் இப்படியும் அப்படியும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஒருத்தரும் விட்டுப் போகாமல் ஸமஸ்த பக்தர்களுக்கும் அநுக்கிரஹம் செய்ய வேண்டுமென்பதால் அவை இப்படிச் சஞ்சரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த நாணிலும், வில்லிலும் மன்மதன் தன்னுடைய சக்தியை வைத்து எய்கிறான். அதனால்தான் ஞான மூர்த்தியாயிருந்த பரமேசுவரன் அம்பாளிடம் பிரேமை கொண்டான். அதனால் ஜீவப் பிரபஞ்சம் முழுதிடமும் அன்புகொண்டான். ஆசையில்லாத பிரம்மம் அசைந்துகொடுத்து, சகல ஜனங்களையும் ரக்ஷித்தது; அம்பாளுடைய கவலையும் தீர்ந்தது.
வில்லைப் பிடித்த மன்மதன் முஷ்டி அம்பிகையின் புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளியாகவும், அவனுடைய மணிகட்டு நாண் கயிறான வண்டு விழிகளுக்கு நடுவில் நாசியின் அடிப்பாகமாகவும் ஆகிவிட்டது. இப்படி ஆசார்யாள் துதிக்கிறார்.
ஈசுவரனின் மீது காம பாணத்தை போடும் அந்தக் கண்களேதான் பக்தர்களைக் கடாக்ஷிக்கும்போது காமத்தைத் துவம்ஸம் செய்து ஞானத்தைப் பொழிகின்றன. மன்மத பாணங்கள் என்பவை என்ன? தாமரை, மல்லிகை, கருங்குவளை, மாம்பூ, அசோக புஷ்பம் ஆகியவைதான் அவனுடைய அம்புகள். ரூபம், ரஸம், கந்தம், ஸ்பரிசம் ஆகிய நான்கால் நம்முடைய நான்கு இந்திரியங்களை ஆகர்ஷிப்பது புஷ்பம். அதன் அழகு கண்ணுக்கும், அதில் சுரக்கிற தேனின் ரஸம் நாக்குக்கும், வாசனை மூக்கிற்கும், மென்மை தொடு உணர்ச்சிக்கும், இன்பம் தருகின்றன. பாக்கி இருக்கிற இந்திரியம் காது. அதற்குதான் வண்டு நாண் – அது எப்போதும் ரீங்காரம் செய்வது. இந்த ஐந்துக்கும் மேலே கரும்பு வில் – அதுதான் எல்லா இந்திரிய சேஷ்டைக்கும் காரணமான மனம்.
வெறும் பூவையும், கரும்பையும், வண்டையும் வைத்துக் கொண்டு மன்மதன் ஸமஸ்த ஜீவராசிகளையும் இந்திரிய வியாபாரத்தால் இழுத்துத் தள்ளுகிறான் என்றால் என்ன அர்த்தம்? ஸாக்ஷாத் பராசக்தியின் அநுக்கிரஹம் இருந்துவிட்டால், வல்லவனுக்குப் புல்லும் ஆயதமாகிவிடும் என்று அர்த்தம். உலக லீலை நடப்பதற்கே அவனுக்கு இந்தச் சக்தியை அநுக்கிரஹித்தாள். ஆகவே கவித்வ அழகுக்காக அவன் அவள் புருவத்தை வளைத்து அம்பு எய்வதாகச் சொன்னாலும் அவள்தான் அவனுக்கும் சக்தி தந்தவள். அவளுடைய சக்தியால்தான் அவன் நம் இந்திரியங்களை வெறித்தோடச் செய்கிறான். இதிலிருந்தே அவளுடைய கிருபை இருந்தால் தான் இந்த இந்திரியங்களை வசமாக்கி, ஓடாமல் நிறுத்த முடியும் என்றும் ஏற்படுகிறது.
தண்டிப்பது, காப்பாற்றுவது (சிக்ஷணை, ரக்ஷணை) இரண்டும் செய்கிறவன்தான் பிரபு. நம் கர்மத்துக்காக நம்மை ஆட்டிவைத்து சிக்ஷிக்கிறாள். காமனை அதிகாரியாகக் கொண்டு அவனுக்கும் ஜயம் வாங்கித் தருகிறாள். அந்தக் காமன் நம்மிடம் வாலாட்ட முடியாதபடி நாம் காம ஜயம் செய்யவும் அவளே கதி. அந்த ரக்ஷணையைச் செய்ய வேண்டுமென்றே லோகமாதாவான அவள் எப்போதும் கவலையோடு புருவ வில்லை வளைத்துக்கொண்டு அம்பு என்கிற பாணத்தை வீசிப் பரமேசுவரனைக் கருணையில் திருப்பிக் கொண்டிருக்கிறாள்.
அம்பாளுடைய கண்களிலிருந்து பொங்குகிற கடாக்ஷம் ஸ்ரீ ஆசார்யாளிடம் பூரணமாகப் பொலிந்துகொண்டிருந்த போது, அவரது வாக்கிலிருந்து ஒரு சுலோகம் வந்தது. இதுவும் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் இருக்கிறது. ‘த்ருசா த்ராகீயஸ் யாதரதளித நீலோத்பல ருசா’என்ற சுலோகம். அவளுடைய கடாக்ஷம் இல்லாமல் இப்படிப்பட்ட அமிருதம் போன்ற சுலோகம் பிறக்க முடியாது. ஆனால் இந்த சுலோகத்திலோ ஆசார்யாள் அம்பாளின் கடாக்ஷம் தமக்குக் கிட்ட வேண்டுமென்றே பிரார்த்திக்கிறார். தமக்குக் கிட்ட வேண்டும் என்று மட்டுமில்லை, ‘தமக்கும்கூட கிட்டவேண்டும்’ என்கிறார் – பக்தியிலும் ஞானத்திலும் சிகரமாக இருந்தும் துளிகூட அகம்பாவமே இல்லாத நம் ஆசார்யாள்.
காமாக்ஷியின் கடாக்ஷ வீக்ஷண்யத்தின் பெருமையை இந்த சுலோகத்தில் சொல்லுகிறார். அவளுடைய கண் பார்வை எத்தனை தூரமும் தாண்டி விழுமாம் – ‘த்ருசா த்ரா கீயஸ்வா’ என்கிறார். ஒரு தாயார்க்காரி பச்சைக் குழந்தைகளைத் தன்பார்வைக்குள்ளேதான் வைத்துக் கொள்வாள். அம்பாளுக்கும் நாம் எல்லோரும் பச்சை குழந்தைகள்தான். பெரிய பெரிய காரியம் சாதித்தவர்கள், அகடவிகடம் செய்கிறவர்கள், எல்லோரும்கூட அவளுக்குப் பச்சைக் குழந்தைகள்தான். மிருகங்கள், பட்சிகள், புல்பூண்டு எல்லாவற்றுக்கும் தாயார்க்காரி அவள். எல்லையில்லாத பிரபஞ்சத்துக்கு அம்மா அவளே. இத்தனையும் அவள் பார்வைக்குள்தான் இருக்கின்றன. எனவே அவளுடைய கடாக்ஷத்துக்கும் எல்லையில்லை. அது நீண்டு நீண்டுபோய், தகுதியே இல்லை என்று எட்டாத் தொலைவில் நிற்கிறவர்கள் மீதும் விழுகிறது. அந்தக் கண்கள் பாதி மூடி, பாதி விரிந்திருக்கிற “நீலோத்பல புஷ்பம்” மாதிரி இருக்கின்றனவாம். ஜலத்தில் நனைந்த நீலோத்பலம் மாதிரி பரம சீதளமாக இருக்கிறது, அவளுடைய திருஷ்டி. நீண்ட நேத்திரங்கள், நீலமான நேத்திரங்கள், குளிர்ந்த நேத்திரங்கள் – இதனால் நீலோத்பலத்தை உவமிக்கிறார். ‘இப்படி நீள நெடுக எங்குப் பார்த்தாலும் போய்க் கொண்டிருக்கும் உன் கடாக்ஷப்பிரவாகத்தில் என்னையும்கூட முழுகும்படியாக செய்தருளேன்’ என்கிறார். ‘மாம் அபி’ – ‘என்னைக்கூட’ என்கிறார். “எனக்கு உன் கடாக்ஷம் கிடைக்க நியாயமே இல்லை என்றாலும் தீனனான என்னையும் உன் பார்வையால் ஸ்நானம் பண்ணி வையம்மா” என்கிறார். ‘தீனம்’, ‘மாமபி’ என்று மிகமிக விநயத்துடன் சொல்லுகிறார் பரமேசுவராவதாரமான ஆசார்யாள். ‘எனக்கு யோக்கியதை இல்லாவிட்டாலும் ஏன் கேட்கிறேன் என்றால், இப்படிக் கடாக்ஷிப்பதால் உனக்கு ஒன்றும் நஷ்டம் வந்துவிடவில்லை என்பதாலேயே கேட்கிறேன்’ என்கிறார். தோஷமுள்ளவர்களைப் பார்த்தாலும்கூட அவளுடைய பார்வைக்குத் தோஷம் வராது – எந்த ஹானியும் வராது. ந ச தே ஹாநிரியதா, ‘உனக்கு நஷ்டமில்லை என்பது மட்டுமில்லை; எனக்கோ இதனால் பரம லாபம் சித்திக்கிறது; நான் தன்யனாகிறேன்’ என்கிறார். ‘அனேனாயம் தன்யோ பவதி’. தனத்தை உடையவன் தன்யன். அம்பாளின் கடாக்ஷத்தால் அருட்செல்வம் என்ற தனம் கிடைக்கிறது, அதற்குமேல் பெரிய செல்வம் எதுவுமில்லை.
‘தகுதியைப் பார்க்காமல் கடாக்ஷிப்பாய்’ என்றதற்கு ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறார். பூரண சந்திர ஒளிபிரகாசிக்கிறது. அது வித்தியாசம் பாராட்டாமல் எல்லா இடங்களிலும் ஒரே போல் அமிருதமான நிலாவைக் கொட்டுகிறது – சக்கரவர்தியின் மாட மாளிகை நிலா முற்றத்தில் சந்திரிகையைப் பொழிகிறது. அதே போல் ஒரே முள்ளுப்புதர் மண்டிய காட்டிலும் நிலவைப் பொழிகிறது. உப்பரிகையில் விழுந்ததால் அரண்மனையின் சௌகரியங்கள் நிலாவைச் சேரவில்லை. காட்டில் விழுந்ததால் அதற்கு முள் குத்தவும் இல்லை. இப்படித்தான் அம்பாளின் கடாக்ஷம் எங்கு விழுந்தாலும் அதற்குக் கூடுதல் குறைவு இவை இல்லை. என் மேல் அது விழுந்தால் ஒன்றும் குறைந்துவிடாது. நானோ அதன் ஸ்பரிசத்தால் நிறைந்தவனாகிவிடுவேன். உனக்கு ஒரு நஷ்டமும் இல்லாமலே எனக்குப் பரம லாபம் கிடைக்கிறது. அதனால் என்னையும் உன் கடாக்ஷத்தில் முழுக்கடிப்பாய் அம்மா என்கிறார்.
என்னையும் என்று ‘உம்’ போட்டுச் சொன்னது நம்மையெல்லாம் உத்தேசித்துச் சொன்னதுதான். அம்பாளும் ஈஸ்வரனும் ஆசாரியாளும் ஒன்றேதான். அப்படிப்பட்ட ஆசார்யாள் பரம கருணையினால் நம்மோடு சேர்ந்து நின்று கொண்டு நமக்காக இந்த சுலோகத்தை அநுக்கிரகித்திருக்கிறார். மனமாரப் பிரார்த்தித்து விட்டால், எத்தனை யோக்கியதை இல்லாதவர்களையும் அம்பாள் கடாக்ஷிக்கிறாள்; நிலாப்போலவும் நீலோத்பலம் போலவும் குளிர்ந்தது அவளது கடாக்ஷம். அது எவரையும் கைதூக்கிவிடும் என்று நமக்குக் காட்டிக் கொடுக்கிறார்.
அம்பாளின் ஸ்வரூபம்
“நீதான் பரமேசுவரன் சரீரம்” என்று ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் அம்பிகையைப் பார்த்துச் சொல்கிறார். சரீரத்திற்குள் உயிர் இருக்கிறது. பல சரீரங்களுக்குள் பல உயிர்கள் இருக்கின்றன. இத்தனை உயிர்களுக்கெல்லாமும் உயிராக ஒரே மூல வஸ்துதான் இருக்கிறது. அந்த மூல வஸ்துவான பிரம்மம்தான் பரமேசுவரன் என்றால், அதன் இத்தனை தோற்றங்களுமே பராசக்தி. இது அவ்வளவும் அதற்குச் சரீரமாகவும், அது இவற்றுக்குப் பிராணனாகவும் இருக்கிறது. பிரபஞ்சம், அதிலுள்ள ஜீவராசிகள் அவற்றின் மனசு, புத்தி, சித்தம், அகங்காரம் எல்லாம் பரமேசுவரன் என்ற உயிருக்குச் சரீரம் மாதிரி. இது அத்தனையும் ஸாக்ஷாத் அம்பாள்தான். உடலும் உயிரும் மாதிரி பிரம்மமும் பிரம்ம சக்தியும் பிரியாமல் இருக்கின்றன. உடலில் எல்லா இடங்களிலும் உயிர் ஓடுகிற மாதிரி பராசக்திக்குள் முழுக்க பிரம்ம தத்வமேதான் நிறைந்திருக்கிறது. அந்த பிரம்மத்துக்கே ஒர் உடம்பு கொடுத்துப் பரமேசுவரன் என்று வைத்தால், அந்த உடம்புக்குச் சாத்திய கவசமாக இருக்கிறவள் அம்பாள். கர்ணகவசம் மாதிரி, பிரிக்கவே முடியாத கவசம்.
அம்பாள் பரமேசுவரனோடு பிரிக்க முடியாமல் கலந்திருப்பதைத்தான் ஒரு மாதிரியாக, இவள் பாதி – அவர் பாதியாக ஒன்று சேர்ந்ததுபோல் அர்த்தநாரீசுவர ஸ்வரூபத்தில் பார்க்கிறோம். சொல்லும் பொருளும் போல் ஈசுவரனும் அம்பிகையும் பிரிக்க முடியாமல் ஐக்கியமாயிருக்கிறார்கள் வாக் அர்த்தாவிவ – என்று மகாகவி காளிதாஸர் சொல்கிறார். நான் ‘பசு’ என்று சொன்னால் அது ‘ப’ என்கிற ஒரு சப்தமும் ‘சு’ என்கிற ஒரு சத்தமும்தான். சொல்லின் சத்தத்திலோ எழுத்திலோ அந்த மிருகம் எங்கே இருக்கிறது என்று கேட்டால் எப்படிச் சொல்வது? எப்படியிருக்கிறது, என்று கேட்டால் எப்படிச் சொல்வது? எப்படியிருக்கிறது, எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனாலும் இந்த வார்த்தையைச் சொன்னவுடன் பசுவின் நினைவு உண்டாகிறது. வாக்கும், அர்த்தமும் பிரிக்க முடியாதபடி இருக்கின்றன. இப்படித்தான் பிரபஞ்சத்தில் ஜீவராசிகளில் அவற்றின் எண்ணங்கள் காரியங்கள் ஆகியவற்றில் பிரம்மம் எங்கே எப்படி இருக்கிறது என்று தெரியாவிட்டாலும் இவை எல்லாம் ‘சொல்’ என்றால் ‘பொருளாக’ அந்த மூலப்பொருள் இருக்கிறது.
அம்பாளுடைய ஸ்வரூபம் என்ன என்றால் நாம் பார்க்கிற அத்தனை உருவங்களும்தான். உருவங்கள் மட்டுமில்லை. எண்ணங்கள், காரியங்கள் எல்லாமும் அவள்தான். அவளின்றி நம் சரீரம், மனசு, உயிர் எதுவுமில்லை. ‘சரீரம் த்வம் சம்போ:– நீ பரமேசுவரனின் சரீரமாயிருக்கிறாய்’ என்று சௌந்தரிய லஹரியில் சொல்கிற ஆசார்யாள் அடுத்த ஸ்லோகத்தில் நீதான் சூக்ஷ்மமான மனதாய் இருக்கிறாய் என்கிறார். அந்த மூலமான மனஸிலிருந்து, சூக்ஷ்மமான ஆகாசம் உண்டாகிறது. அது மேலும் மேலும் ஸ்தூலமாகி, காற்று, அக்னி, ஜலம், மண் எல்லாம் வந்தன. இதெல்லாமும் நீதான் என்கிறார். நீ இல்லாமல் வேறு வஸ்து எதுவுமே இல்லை என்கிறார்; த்வயி பரிணதாயாம் நஹி பரம்.
‘சம்பு’ என்ற உயிருக்கு நீ சரீரம் என்று சொன்னாலும், உயிர், உடல் என்ற பேதமில்லாமல் ஒன்றாக இருந்ததும் நீதான். நீயேதான் விசுவம் என்கிற சரீரமாகப் பரிணமித்தாய் – த்வம் ஏவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விச்வ வபுஷா.
இங்கே நம் சங்கராசாரியார் சொல்வது, ‘உலகம் எல்லாம் பரமாத்மாவுக்கு சரீரம்; உள்ளேயிருக்கிற உயிர், அந்தர்யாமி அவரே’ என்கிற ராமாநுஜ சித்தாந்தம் மாதிரி இருக்கிறது. ஆனால் அப்போதுகூட உடம்பு, உயிர் என்ற வித்தியாசம் – துவைதம் – இருக்கிறது. கொஞ்சம் த்வைதம் மாதிரி சொன்னவர் தொடர்ந்து அத்வைதத்தையே சொல்கிறார். ‘எங்களிடம் இருக்கிற துளித் துளி ஞானத்துக்கும் ஆனந்தத்துக்கும் மூலமான பரம ஞானமும், பரமானந்தமும் நீதான். இந்த ஞானத்தையும் ஆனந்தத்தையும் அநுபவிப்பதற்கே ஒன்றாக இருந்தவள், இரண்டு மாதிரி ஆகி சிவயுவதி என்ற பாவத்தைத் தாங்கியிருக்கிறாய்’ என்கிறார். இது பாவம்தான். வாஸ்தவத்தில் விச்வ சரீரமும் அதன் உயிரான அம்பாளும் ஒன்றுதான். அந்த அம்பாளும் யாருக்கு சரீரம் மாதிரி இருக்கிறாளோ அந்த சம்புவும் அவளும்கூட ஒன்றுதான். அத்வைதம்தான்.
ஒன்று எங்கேயும் இருக்கிறது என்றால், அதற்குத் தனி உருவம் எப்படி இருக்க முடியும்? காற்று அநேகமாக எங்கேயும் செல்ல முடிகிறது. அதற்கு ரூபம் இருக்கிறதோ? அம்பாளோ அதைவிட சூக்ஷ்மம். காற்று இல்லாத சூனியத்தை (vaccum) கூட உண்டாக்குகிறார்கள். ஆனால் அவள் இல்லாத இடம் இல்லை. மனசு, எண்ணம் இதற்குள்ளும் இருக்கிறாள். அப்படியானால் அவளுக்கு எப்படி உருவம் இருக்க முடியும்? ஆனால் இது நம் சாமானிய நிலையில் மனசுக்கு ஹிதமாக இல்லை. அவளிடமிருந்து நாம் வந்தோம் என்பதால் அவள் அம்மாவும் நாம் குழந்தைகளும் மாதிரி. அம்மா ஒருத்தி இருக்கிறாள் என்று குழந்தைக்குத் தெரிந்து விட்டால் மட்டும் அது சந்தோஷப்படுமா? அவள் இருந்தால் மட்டும் போதாது, அவளைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என்று ஆசைப்படும்.
அவள் எல்லா ரூபமாகவும் இருக்கிறாள் என்று நம்மால் உணர முடியவில்லை. அருவமாகவே அவளைத் தியானிக்க நமக்குப் பக்குவம் போதவில்லை. இப்படிப்பட்ட நமக்காகவே, நாம் அன்பு செய்வதற்காகவே, அவள் இப்போது காருண்யமும் லாவண்யமும் ஒரு ரூபமாகித் திவ்விய மங்கள விக்கிரகமாக வருகிறாள். ரூபமில்லாத நெய்யை நன்றாகக் குளிர வைத்தால் பாளம் பாளமாகப் பெயர்த்து எடுக்கிற மாதிரி கெட்டிப்பட்டுப் போகிறது அல்லவா? இப்படித்தான் ‘க்ருத காடின்யவத்’ என்கிற நியாயப்படி, பக்தர்களுடைய நெஞ்சின் குளிர்ச்சியில் பரம சூக்ஷ்மமான அம்பிகை உறைந்து போய், ஸ்தூலமான பல திவ்விய ரூபங்களை எடுத்துக் கொள்கிறாள்.
அம்பாளுடைய அப்படிப்பட்ட ரூபம் எப்படி இருக்கும்?
சாதாரணமாக, பத்துப் பேருக்கு, நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால், அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது? அன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பாருங்கள். அந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது? சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது. ஒரு பத்து பேர் அல்லது நூறு பேருக்கு மட்டும் ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவனிடமே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கின்றன. மகா பாபங்களைச் செய்து – காரியத்தில் செய்யாவிட்டாலும், மனஸினால் மகா பாபங்களை நினைத்து, ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணேசுவரியான அம்பாள்தான். அவளுடைய அன்பையும், அதனால் உண்டான ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. அம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம் என்கிறார்கள். அவளைப் பற்றி ‘ஸெளந்தர்ய லஹரி’ என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். இத்தனை ஸெளந்தர்யம், லாவண்யம் அவளுக்கு எப்படி வந்தது என்றால் அன்புதான் அழகாகிறது. காருண்யம்தான் லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல. கொஞ்சம் கோபம் வந்தால், துளி ஜுரம் வந்தால், சரீர அழகு போய்விடுகிறது. அம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள். எந்த பக்தருக்கு அந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் செய்வதற்காகப் பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள். ராஜராஜேசுவரி, புவனேசுவரி, துர்க்கை, காளி என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசில் அவளை ஆராதிக்க வேறு வேறு ரூபம் கொள்கிறாள்.
ஒவ்வொரு ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய வேண்டுமானால், அதற்கு உபாயமாக ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது. மந்திரம் என்பது ஒரு சப்தக் கோவை அக்ஷரங்களின் கூட்டம். பல வடிவங்களில் இருக்கிற அம்பாளே பல சப்தங்களாகவும், அக்ஷரங்களாகவும் இருக்கிறாள். அவளுடைய அநுக்கிரகத்தால் மகா கவியாகப் பரிணமித்த காளிதாஸர் அவளை ஸர்வ வாணாத்மிகே, ஸர்வ மந்த்ராத்மிகே என்று ‘சியாமளா தண்டகத்தில்’ ஸ்துதி செய்கிறார். ‘வர்ணம்’ என்றால் ‘நிறம்’ என்று நினைப்பீர்கள்.’வர்ணம்’ என்றால் ‘அக்ஷரம்’ என்று அர்த்தம். ஒலி வடிவான அக்ஷரங்களும், ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான். அவை ஒன்றுக்கொன்று நிரம்ப நெருக்கமான சம்பந்தம் உடையவை. ஸயன்ஸ் நிபுணர்கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள். ஜலக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகளைப் (vibration) பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன. நாதத்துக்கே ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது.
ஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன. இதை ‘வீசிதரங்கம்’ என்பார்கள். ஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பதுபோல் விழுகிற சப்தங்களை ‘முகுளம்’ என்பார்கள். இப்படிப் பலவகைப்பட்ட சப்தங்களையெல்லாம் ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்குப் பெயர் “மாத்ருகா” என்பது. ‘மாத்ரு’ என்றால் ‘தாயார்’ என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சப்தமாகவும், எழுத்தாகவும் அம்பாள் இருக்கிறாள். இவற்றில் சில சப்தக் கோவைகளை விடாமல் ஜபிக்கும்போது, அவற்றுக்குறிய ரூபங்களும் பிரத்யக்ஷமாகின்றன. இப்படிப்பட்ட சப்தக் கோவைகளைத்தான் மந்திரம் என்கிறோம். மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான். கை கால் முதலான அவயங்களோடு ஆயுதங்களைத் தரித்த வடிவங்களைப் போலவே எல்லா மந்திரங்களும் அவள் வடிவம்தான்; அதோடுகூட, இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட சித்தத்தோடு தீவிரமாக ஜபம் செய்தால், அவளே அந்தந்த மந்திரத்துக்குரிய ரூபத்தில், சரணாகதி அவயவங்களுடனும் ஆயுதங்களுடனும் முத்திரைகள் முதலியவற்றுடனும் தரிசனம் தருவாள். இந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது பிரணவம். அதிலிருந்து இந்த நாம, ரூபப் பிரபஞ்சம் முழுக்க வந்தது. நாத ஸ்வரூபிணியான அம்பாளே ஓங்காரமாகிய அந்தப் பிரணவமும் ஆவாள். அ,உ,ம மூன்றும் சேர்ந்து ‘ஓம்’ என்று ஆகிறது. அ – சிருஷ்டி; உ – பரிபாலனம்; ம – சம்ஹாரம் என்பார்கள். அதனால் முத்தொழிலும் செய்யும் மூல சக்தியே பிரணவம். இதையே அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால், உ – ம – அ – என்றாகும். அதுதான் உமா என்பது. உபநிஷதமும் அவளை ‘உமாஹைமவதி’ என்றே சொல்கிறது.