69. தேவதாமூர்த்திகள் – அவதார புருஷர்கள் – பகுதி முப்பத்து இரண்டு

அம்பாளின் இருப்பிடம்

பராசக்தி இல்லாத இடம் ஏதுமில்லை. ஆனால் மனசுக்குப் பிடிப்பு உண்டாவதற்காக அவளுக்குப் பல வாஸஸ்தானங்களைச் சொல்லியிருக்கிறது. முக்கியமாக ஸ்ரீ வித்யா என்கிற தேவி உபாஸனா மார்க்கத்தில் சொல்கிறபோது, அவள் அமிருத சாகரத்தின் மத்தியில், மணித்வீபம் என்கிற மணிமயமான தீவில் இருப்பதாகச் சொல்கிறோம். மணித்தீவில் பல கோட்டைகள் உத்தியான வனங்களுக்குள், சிந்தாமணிகளயை இழைத்துச் செய்த கிருகத்துக்குள் இருக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், ஸதாசிவன் இவர்கள் நாலு கால்களாகவும், உட்காருமிடமாகவும் அமைந்து உருவான மஞ்சத்தின்மேல், பிரம்ம ஸ்வரூபமான காமேசுவரனின் இடது பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள் என்று சொல்லியிருக்கிறது. அவள் இருக்கும் இடத்தை ஸ்ரீபுரம் என்று கூறியிருக்கிறது. அமிருத ஸாகரத்தில் இருப்பதாகச் சொல்கிற மாதிரியே ஸ்வர்ணமயமான மேருசிகரத்தில் இந்த ஸ்ரீபுரம் இருப்பதாகவும் சொல்வதுண்டு.

தியானம் செய்வதற்குப் பரம சௌக்கியமாக இன்னொரு வாஸஸ்தானமும் சொல்லியிருக்கிறது. ‘லலிதா ஸஹஸ்ரநாமத்தின் பலச்ருதியில் சொல்லியிருக்கிற இந்த முறையில் பல மகான்கள் அவளுடைய இருப்பிடத்தைத் தியானம் செய்து பரமானந்தத்தை அநுபவிக்கிறார்கள். அது என்ன என்றால், பூரண சந்திர மண்டலத்திற்குள் அம்பாள் அமர்ந்திருப்பதாகத் தியானம் செய்வதாகும். ஸஹஸ்ர நாமத்திலேயேசந்திர மண்டல மத்யகாஎன்று ஒரு நாமம் வருகிறது.

பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அழகுள்ளது சந்திரன். நிலாச் சாப்பாடு, நிலாவில் பாட்டுக் கச்சேரி எல்லாம் வைத்துக் கொண்டு சந்தோஷப்படுகிறோம். இருந்தாலும் எலெக்ட்ரிக் ஜோடனை அதிகமாகிவிட்ட இக்காலத்தவர்களுக்குச் சந்திரன் அருமை தெரிந்திருக்க நியாயமில்லை. சீதளமான அதன் பிரகாசம் அலாதியானது. கண்ணை உறுத்தாத ஒளி வாய்ந்தது சந்திரன். அதிலும் பௌர்ணமி சந்திரனின் அழகு விசேஷம். இந்த அழகு விசேஷமாகத் தெரிய வேண்டும் என்பதற்கே ஈசுவரநியதியில் முப்பது நாட்களுக்கு ஒரு முறைதான் பூர்ணிமை வருகிறது. தினமும் பௌர்ணமி இருந்தால் பூரண சந்திரனில் நாம் இத்தனை சந்தோஷம் அடைய முடியாது. இந்தப் பூரண சந்திரமண்டலத்தை முதலில் தியானித்து, அதில் அம்பாளைத் தியானிக்க வேண்டும்.

பூரண சந்திரனைத் தியானிக்கிற போதே மனசும் அது போல் குளிர்ந்து போகிறது. அங்கே துக்கத்துக்கும் துவேஷத்துக்கும் இடமில்லாமல் சாந்தமாகிறது. வெளிப் பிரபஞ்சமெல்லாம் ஜீவனுக்குள்ளே இருக்கிறது. அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பார்கள். சகல ஜீவராசிகளுக்கும் அந்தராத்மாவாக இருக்கிற பராசக்தியின் மனஸே சந்திரனாக ஆகியிருக்கிறது. ‘புருஷ ஸூக்தத்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது. இதனால் ஜீவராசிகளின் மனத்துக்கும் சந்திரனுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இங்கிலீஷில் சித்தப் பிரமை பிடித்தவர்களை lunatic என்கிறார்கள். Lunar என்றாலே சந்திரனைப் பற்றியது என்றுதான் அர்த்தம். இது சித்தத்தின் விபரீத நிலையைச் சந்திரனோடு சேர்த்துச் சொல்கிறது. சித்த சுத்திக்கு அதே சந்திர மண்டலத்தில் அம்பாள் தியானத்தை நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

சந்திரனில் அம்பாள் அமர்ந்திருப்பதாகச் தியானிக்க வேண்டும். தியானம் செய்கிறவனுக்கோ புலித்தோலை ஆசனமாக விதித்திருக்கிறது. சந்திரனுக்கு நேர் எதிராக புலி என்றால் உக்கிரமாக இருக்கிறது. புலி எப்படி தன் லக்ஷியமான இரையை ஒரே பாய்ச்சலில் பிடித்து விடுகிறதோ அப்படி நம் தியான லக்ஷியத்தை மனசு விடாப் பிடியாகப் பிடித்துக்கொள்வதற்கே வியாக்ராஸனம் விதித்திருக்கிறது. அதில் அமர்ந்து அம்பாளை சந்திர மண்டல வாஸினியாக தியானித்தால், நம் மனமும் அவள் மனத்திலிருந்து வந்த சந்திரனைப்போல் குளிர்ச்சி அடையும். சந்திரன் தாபத்தைப் போக்குவதுபோல் நம் தாபமும் சமனமாகும். சந்திரிகையில் இருட்டு விலகுகிற மாதிரி அஞ்ஞானம் விலகும்.

சூரியனை ஞான ஸ்வரூபமாகச் சொல்லியிருக்கிறது. ஆனால் சூரியப் பிரகாசம் தாபம் உண்டாக்குகிறது. அதுவே சந்திரனில் பிரதிபலித்து பரம சீதளமாகிறது. சந்திரனுக்கு ஸ்வபாவமாக ஒளி கிடையாது. அம்பாள் சூரியனைப்போல் ஸ்வயம் பிரகாசமாகவும், சந்திரனைப்போல் சீதளமாகவும் இருக்கிறாள். தாபத்தைப் போக்கும்போதே ஞானப் பிரகாசமும் தருகிறாள். ஞானம் தருகிற குருமூர்த்தி அவளேதான். காளிதாஸர்தேசிக ரூபேண தர்சிதாப்புதயாம்’, ‘குரு வடிவத்தில் வந்து தன் மகிமையைக் காட்டுகிறவள்என்று அம்பிகையை வர்ணிக்கிறார். எனவே சந்திரமண்டலத்தில் குரு பாதத்தையும் தியானிக்கலாம். நம் தாபங்கள் விலகவும், ஞானப்பிரகாசம் உண்டாகவும், நாம் எல்லோரிடம் குளிர்ந்து இருக்கவும் இம்மாதிரி சந்திர மண்டலத்தில் அம்பாளையோ, குரு பாதுகையையோ தியானிக்க வேண்டும். அம்பாளையோ குருவாகத் தியானிக்க வேண்டும்.

ஞானாம்பிகை

 ‘ஸ்ரீ வித்யாஎன்று தேவி உபாஸனையைச் சொல்கிறோம். ‘வித்யாஎன்றாலே ஞானம்தான். அவித்யை என்றால் அஞ்ஞானம், ஞானப்பால் தருகிற குருவான அம்மாவாக அம்பிகை இருக்கிறாள். இந்திராதி தேவர்களுக்கும் ஞானம் தந்தவள் அவளே என்று ஸாம வேதத்தைத் சேர்ந்த கேன உபநிஷதம் ஒரு கதை சொல்கிறது.

கதை இதுதான்:

ஒரு காலத்தில் தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் ஜயம் பெற்றார்கள். ‘பரமாத்மா தந்த சக்தியைக் கொண்டே யுத்தம் செய்தோம்; அவரது அநுக்கிரகத்தாலேயே வெற்றி பெற்றோம்என்பதை மறந்து, தேவர்கள் தங்களைத் தாமே மெச்சிக் கொண்டார்கள்.

தங்கள் சக்தியால் தாங்களே வெற்றியைச் சாதித்துவிட்டதாகச் கர்வப்பட்டார்கள். ‘இது ஏதடா, அசுரர்களை ஜயித்த இந்த தேவர்களுக்கே அசுர குணம் வந்துவிடும் போலிருக்கிறதேஎன்று பார்த்தார் பரமாத்மா.

அவர்கள் அப்படிக் கெட்டுப் போகாமல் ரக்ஷிப்பதற்காக அவர்களுடைய கண்ணுக்கெட்டுகிற தூரத்தில் அடிமுடி தெரியாத ஒரு ஜோதிஸ்வரூபமாய் நின்றார்.

இதென்ன யக்ஷ வடிவம்?’ என்று தேவர்கள் அதிசயித்தார்கள். நமக்குப் புரியாததையக்ஷிணிஎன்று இப்போதும் சொல்கிறோம் அல்லவா? அம்மாதிரி தேவர்கள் அதையக்ஷம்என்கிறார்கள். அதனிடம் அக்னியை அனுப்பினார்கள்.

அது என்ன என்று தெரிந்துகொண்டு வருவதற்காக அக்னியை அனுப்பினார்கள். அவன் அதை நெருங்கிநீ யார்?” என்று கேட்பதற்கு முன்பே, அது இவனைப் பார்த்துநீ யார்?” என்றது?.

நான் அக்னியாக்கும். ‘ஜாத வேதஸ்என்கிற பெயரும் எனக்கு உண்டுஎன்றான்.

சரி, உனக்குள்ள சக்தி என்ன?” என்று யக்ஷம் கேட்டது.

நான் எதையும் எரித்து பஸ்மீகரம் பண்ணிவிடுவேன்என்றான் அக்னி.

ஒஹோ! அப்படியானால் இதை எரி பார்க்கலாம்என்று சொல்லி ஒரு துரும்பை எடுத்துப்போட்டது யக்ஷம்.

அக்னி தன் பூரண சக்தியையும் அந்தத் துரும்பின் மேல் பிரயோகித்தான்.

ஆனால் துரும்பு எரியவே இல்லை.

அக்னி வெட்கமடைந்து தேவர்களிடம் திரும்பி வந்து நடந்ததைச் சொன்னான்.

இதென்னடா! நாம் வெற்றி கொண்டாடும்போது இப்படி நம்மில் ரொம்ப சக்திமானான ஒருத்தனுக்குஅக்னிக்குஅபஜயம் வந்ததேஎன்று தேவர்கள் நினைத்தார்கள். யக்ஷம் இன்னதென்று தெரியாததே ஒரு தோல்விதான்; அப்புறம் இந்த அபஜயம் வேறு. அதன்பின் அவர்கள் வாயுவை யக்ஷத்திடம் அனுப்பினார்கள்.

முன்போலவே, “நீ யார்என்று கேட்டது யக்ஷம்.

நான் வாயு’. ‘மாதரிச்வன்என்றும் பெயர் பெற்றவன். எதையும் புரட்டித் தூக்கிக்கொண்டு போகும் சக்தி வாய்ந்தவனாக்கும்என்றான் வாயு.

சரி, இந்த சின்னத் துரும்பைத் தூக்கிப்பார்என்றது யக்ஷம்.

வாயு பிரம்மப் பிரயத்தனம் செய்தும் அவனால் துரும்பை அசைக்க முடியில்லை.

வாயுவும் திரும்பி வந்தான்… “நீ யார்?” என்று யக்ஷத்தைக் கேட்பதற்கே வாயில்லாதவனாக.

நாம் அசுரரிடம் அடைந்த ஜயத்தைக் கொண்டாடும் வெற்றி விழாவை இப்படி இது அபஜயமாக்கிவிட்டதேஎன்று தேவர்கள் யோசித்தார்கள்.

இப்போது தேவராஜனுக்கே ஒருவித அடக்கம் உண்டாகிவிட்டது. தங்களைவிடப் பெரியதொரு சக்தி இருக்கிறது என்கிற அறிவு உண்டாயிற்று. அகம்பாவம் போய், ஒரு க்ஷணம் ஈசுவர பக்திகூட உண்டாகிவிட்டது.

நாம் ஏதோ சாதித்துவிட்டதாக அவ்வப்போது வெற்றிவிழாக் கொண்டாடுகிறோம். இப்போது நம் தேசத்தில் இது ரொம்ப ஜாஸ்தி. கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் அந்த வெற்றி எங்கே போச்சு என்று தெரிவதேயில்லை. வேறு யாரோ வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். அப்புறம் அவர்கள் கதையும் மாறிப்போகிறது. மாறாத ஜயம் ஆத்ம ஜயம்தான். அந்த ஜயமும் சரி. மற்ற லௌகிக வெற்றிகளும் சரி, பரதேவதையின் கிருபையாலேயே கிடைப்பவை.

இதைப் புரிந்துகொண்டு, தேவதைக்கெல்லாம் சக்கரவர்த்தியாக இருக்கப்பட்ட இந்திரன் யக்ஷத்தை விநயத்துடன் நெருங்கினவுடன், மகாகாருண்யம் பொருந்திய அது இவனுக்கு ஞான அநுக்கிரஹம் செய்வதற்காக திவ்விய ஸ்திரீ ரூபத்தில் நின்றது.

(யக்ஷம் நின்ற) ‘அந்த ஆகாசத்திலேயே மகத்தான சோபை பொருந்திய ஹைமவதியான உமாதேவி பிரகாசித்தாள்என்கிறது உபநிஷத்து.

உருக்கிய பொன்னைப் போன்ற பிரகாசத்தோடு, அதாவது ஞான ஒளியாக ஒளித்துக்கொண்டு நின்ற அம்பாளை இந்திரன் நமஸ்கரித்தான். “சற்று முன் இங்கு தோன்றிய யக்ஷ வடிவம் என்ன?” என்று கேட்டான்.

சாக்ஷாத் அம்பிகை அவனுக்கு ஆசாரிய ஸ்தானம் வகித்து ஞானோபதேசம் செய்தாள்;

அப்பா, பிரம்மம்தான் அந்த யஷ வடிவம். இவ்வளவு பிரபஞ்சத்துக்கும், உனக்கும். சகல தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் காரணமாக, ஆதாரமாக இருப்பது அது ஒன்றுதான். அதன் அகண்டமான சக்திதான் எல்லா ஜீவராசிகளிடமும் கண்டம் கண்டமாக, துளித் துளி இருக்கிறதுஎன்று உபதேசித்தாள்.

முதலில் யக்ஷ வடிவமாக நின்று, தேவர்களை அவமானப்படுத்தினாள். அவமானப்படுத்தியது அகம்பாவத்தை அடக்குவதற்கே! அகம்பாவம் அடங்கினவுடன் பரமாநுக்கிரஹமாக ஞானோபதேசம் தந்தாள்.

தேவராஜன் உண்மையை இதுவென (இதம்) முதலில் கண்டுகொண்டதாலேயே (த்ர) அவனுக்குஇந்திரன்என்று பெயர் உண்டாயிற்று. மற்ற தேவர்கள் பிரம்ம ஸ்வரூபத்தை பார்த்ததோடு சரி. இவன்தான் அதன் கருணாமூர்த்தமான அம்பாளைத் தரிசனம் செய்து, அவளிடமிருந்து பிரம்ம ஸ்வரூப ரஹசியத்தை உபதேசமாகப் பெற்றுக்கொண்டு வந்தவன்.

இந்த உபநிஷத்தில், ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்களின் பாஷ்யத்தில் பஹுசோபமானா – ‘மிகவும் சோபை பொருந்தியவள்என்பதற்கு அர்த்தம் செய்கிறபோது, ‘சோபை உள்ளவற்றுக்கெல்லாம் மேலான உத்கிருஷ்டமான சோபை ஞானம்தான்வித்யைதான். அந்த வித்யா ரூபிணியே உமா. ஹைமவதியாகி ஹேம (பொன்) ஆபரணங்களை அணிந்தும், இந்தச் சோபையை வெளிப்படக் காட்டுகிறாள். எல்லாவற்றையும் அறிகிற அறிவான ஸர்வக்ஞ தத்துவமே பரமேசுவரன். அந்த அறிவோடு இரண்டறச் சேர்ந்திருக்கிற ஞான ஸ்வரூபிணியே அவள்என்கிறார்.

அறிகிறவன், அறியப்படுகிற பொருள், அறிவு எல்லாமே தானாக ஆகிய ஏக வஸ்துவான பிரம்மத்தின் சக்தி அவள். ‘சித்தமிசை குடிகொண்ட அறிவான செய்வமேஎன்று இந்த ஞான ஸ்வரூபத்தைத்தான் தாயுமான ஸ்வாமிகள் சொல்கிறார்.

அடி முடி தெரியாத யக்ஷ வடிவம் என்று சொன்னவுடன், இந்தக் கதைக்கும் அருணாசலத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக தோன்றும். இந்த உபநிஷக் கதை ஸ்ரீ காளஹஸ்தியுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

நான் காளஹஸ்திக்கு போயிருந்தபோது, கிரிப்பிரதக்ஷிணம் செய்தேன். வழியில் ஒரு மலைமேல் ஏறி, அங்கு வனத்திலுள்ள சிவலிங்கத்தைத் தரிசனம் செய்துகொண்டேன். அந்த லிங்கம், ‘ஸஹஸ்ர லிங்கம்’ – அதாவது லிங்காகாரமான ஒரே சிலைக்குள் சின்னச் சின்னதாக ஆயிரம் லிங்கங்கள் வடித்திருக்கும். அந்த ஸஹஸ்ர லிங்க ஆலயத்தில்யக்ஷ லிங்கம்என்று ஒன்றைச் சொல்கிறார்கள். ‘இந்திர லிங்கம்என்றும் ஒன்று இருக்கிறது. காளஹஸ்திப் பெரிய கோயிலில் இருக்கிற அம்பாளின் பெயரோ ஞானாம்பிகை அல்லது ஞானப்ரஸுனாம்பிகை. ப்ரஸுனம் என்றால் பூ, ஞானப்ரஸுனாம்பிகையை ஞானப் பூங்கோதை என்பார்கள். இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால், கேன உபநிஷத்தில் சொல்லியிருக்கிற சம்பவம்யக்ஷம் தோன்றினதும், பிறகு அம்பாள் ஆவிர்பவித்து இந்திரனுக்கு ஞானோபதேசம் செய்ததும்இந்தக் காளஹஸ்தியில்தான் நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

அம்பாளை ஆராதிக்க நாமாகப் புது மார்க்கம் கண்டு பிடிக்க வேண்டியதில்லை. ஸ்ரீகாளஹஸ்தியைப்போல் தேவர்களும் பெரிய ரிஷிகளும் மகாத்மாக்களும் அவளை ஆராதித்த இடங்கள் இன்று மஹா க்ஷேத்திரங்களாக விளங்குகின்றன. அங்கே போய் நமஸ்கரித்துத் தியானம் செய்தால் போதும். அவளுடைய கடாக்ஷம் கிட்டிவிடும்.

புஷ்பமும் சுகந்தமும்போல், பாலும் சுவையும்போல், அக்னியும் பிரகாசமும்போல், அவள் பரமேசுவரனோடு பிரிக்க முடியாத ஞான சக்தி. இதேமாதிரி ஸ்ரீமந் நாராயணனோடும் பிரிக்க முடியாமல் சகோதர் பாவத்தில் இருக்கிறாள். அவள் துர்க்கையாக வந்து அசுரர்களை வதைத்தபோது வைஷ்ணவியாக இருக்கிறாள். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியின் போதே யசோதையின் கர்ப்பத்திலிருந்து விஷ்ணு மாயையாக இந்த துர்க்கை அவதரித்தாள். துர்க்கையை சரத்கால நவராத்திரியில் பூஜிக்கிறோம். கெட்டதை வதைத்தவள் அவள். இந்த சம்ஹாரத்துக்கு பிறகு நல்லதை வளர்க்க வேண்டும். ஞானத்தை வளர்க்க வேண்டும். ஞானோபதேசம் செய்ய அம்பாள் ஆவிர்ப்பதையே வஸந்த காலத்தில் ஒரு நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். கிருஷ்ணனோடு துர்க்கை தோன்றின மாதிரி, ஸ்ரீராம நவமியின்போதுஞானாம்பிகைதோன்றினாள். இந்த நவமி முடிய ஒன்பது நாட்கள்வஸந்த நவராத்திரிஎனப்படும். சண்டிகையாக உக்கிர ரூபத்தில் எந்தப் பராசக்தியை சரத்கால நவராத்திரியில் பூஜித்தோமோ, அவளையே இப்போது ஸெளம்ய ரூபத்தில் ஞானாம்பாளாக பூஜிக்க வேண்டும். சண்டிகையாகிக் கெட்டதை சிக்ஷித்தவளே ஞானாம்பிகையாகி நல்லதை உபதேசித்து ரக்ஷிக்கிறாள்.

உமா என்பது பிரணவ ஸ்வரூபம் முன்பே சொன்னேன். நாதமே அவளுக்கு சரீரம் மாதிரி. நம் சரீரம் எத்தனை அழகாக இருக்கிறது என்று நாம் அகம்பாவப் பட்டுக் கொண்டாலும், துளி மேலே கீறிவிட்டால்கூட உள்ளே பார்க்கச் சகிக்காமல் இருக்கிறது. எத்தனையோ கழிவடைகளை உள்ளே அடைத்து வைத்திருக்கிறோம். இதற்குள் எங்கே என்று சொல்லத் தெரியாமல் அறிவு என்கிற ஒரு மணி இருக்கிறது. அவளுடைய சரீரமோ நாதமயம், சப்த மயம், வாக்கு மயம்ஐம்பத்தோர் அக்ஷரங்களுமே அவளுக்குச் சரீரமாக இருக்கிறது. அதில் முழுக்க முழுக்க அறிவே வியாபித்திருக்கிறது. அந்த அறிவைத்தான் ஞானாம்பிகை என்பது.

மாறிக்கொண்டும் அழிந்துகொண்டும் இருப்பவைகளைச் சத்தியமென்று நினைக்காமல், மாறாமல் சாசுவதமாக உள்ள ஒரே வஸ்துவை, அதற்கு வேறாக நான் என்று தனியாக ஒன்று இல்லை என்று அநுபவத்தில் தெரிந்து கொள்வதுதான் உண்மையான அறிவு. இந்த அறிவைத் தருகிற பராசக்தி ஞானாம்பிகையாகி திவ்விய மங்கள ஸ்வரூபிணியாக விளக்குகிறாள். அவளை எந்நாளும் தியானம் செய்து அநுக்கிரஹம் பெறுவோம்.