பாப புண்ணியங்கள்
இந்த உலகில் நாம் எவருமே பாபியாக இருக்க விரும்பவில்லை. ஆனால் பாப காரியமே அதிகம் செய்கிறோம். நாம் எல்லோருமே புண்ணிய பயன் பெறத்தான் விரும்புகிறோம்; ஆனால் புண்ணிய காரியங்களைச் செய்வதில்லை.
“பாபம் செய்ய யாருமே விரும்பவில்லை. ஆனாலும், கிருஷ்ணா! அவனை எதுவோ பாபத்திலேயே பலாத்காரமாகத் தூண்டிக் கொண்டிருக்கிறதே, அது என்ன?” என்று அர்ஜுனன் பகவானைக் கேட்கிறான்.
“அதுதாண்டா அப்பா, ஆசை ஆசை என்பது” என்று பகவான் பதில் சொன்னார்.
ஆசையினால் ஒன்றை அடைய முயல்கிறோம். எப்படியாவது அதை அடைந்துவிட வேண்டும் என்பதால்—தர்ம அதர்மங்களைப் புறக்கணித்து விடுகிறோம். அந்த ஆசை நிறைவேறிவிட்டால் அதோடு திருப்தி உண்டாகிறதா? இல்லை. அக்னியில் நெய்யை விட்டால் அது அணைந்தாபோகிறது? மேலும் பெரிதாக வளர்கிறது. அப்படியே ஓர் ஆசை பூர்த்தியான மனஸில் இன்னோர் ஆசை பெரிதாக மூளுகிறது.
சரி, அப்படியானால் ஆசை நிறைவேறாவிட்டாலே நல்லது என்று சொல்லவா? அப்படியும் இல்லை. ஆசை நிறைவேறாவிட்டால் நமக்கு ஆத்திரம் உண்டாகிறது. சுவரில் எறிந்த ரப்பர் பந்து திரும்புவதுபோல் நிறைவேறாத ஆசையானது கோபமாகத் திரும்பி வந்து நம்மைப் பாபத்தில் மேலும் தள்ளுகிறது. ஆசைக்கு அடுத்தபடி இந்தக் குரோதத்தைத்தான் பகவான் கீதையில் சொன்னார். இதுவும் ஆசையின் விளைவுதான்.
அப்படியானால் பாபம் செய்யாதிருப்பதற்கு ஒரே வழி ஆசைகளை அழிப்பதுதான். இதை எப்படிச் செய்வது? நாம் காரியம் செய்யாமல் இருக்கமுடியாது. உடம்பு காரியம் பண்ணாதபோதுகூட நம் மனசு காரியம் பண்ணிக்கொண்டேதான் இருக்கிறது. எதையாவது எண்ணிக் கொண்டேயிருப்பதுதான் மனஸின் காரியம். உடம்பு, மனசு ஆகியவற்றால் இந்த இரு வகையிலும் நாம் செய்கிற அத்தனை காரியங்களும் இப்போது நம்முடைய சொந்த ஆசை அபிலாஷைகளையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இதனாலேயே அவை நம்மை மேலும் மேலும் பாபத்திலே கொண்டு போய்த் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அப்படியானால் இனி காரியமே இல்லாமல் சும்மாயிருந்து விடலாமா என்று பார்த்தால், மநுஷ்ய ஸ்வபாவம் நம்மை அப்படியிருக்க விடமாட்டேன் என்கிறது.
‘சிந்தையை அடக்கியே சும்மாயிருக்கின்ற திறம் அரிது’ என்று தாயுமான ஸ்வாமிகள் சொன்னார். உடம்பின் காரியத்தைக் கொஞ்சம் நிறுத்தினால் கூட சித்தத்தின் காரியம் நிற்கமாட்டேன் என்கிறது. அது தான் காரியம் செய்வதோடு உடம்பையும் காரியத்தில் ஏவிவிடுகிறது.
ஆசையை நேராக நிறுத்த முடியவில்லை. காரியத்தையும் நிறுத்த முடியவில்லை என்றால் நமக்கு கதிமோக்ஷமே இல்லையா? இந்தப் பிரச்சனைக்கு (Problem) தீர்வே (Solution) இல்லையா? இருக்கிறது. அதாவது இப்போது நாம் இருக்கிற நிலைமையில் காரியத்தை அடியோடு நிறுத்திவிட வேண்டுமென்பதில்லை. ஆனால் நாம் சொந்த ஆசைகளுக்காகவே காரியம் செய்து கொள்கிறோம் என்ற நிலைமையை மாற்றி, நமக்கு லௌகிகமாக லாபம் தராத காரியங்களில் ஈடுபட வேண்டும். லோகோபகாரமாகவும், நமக்கே ஆத்மார்த்தமாகப் பலன் தருவதாகவும் இருக்கப்பட்ட காரியங்களில் இறங்க வேண்டும். இப்படிப்பட்ட காரியங்களில் ருசியை உண்டாக்கிக் கொண்டு மேலும் மேலும் ஈடுபடுகிறபோது, ஆசைகளும் குறைந்து கொண்டே வருகின்றன; பாபம் குறைகிறது; புண்ணியம் ஏறுகிறது. அதாவது இப்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் ஆசையில்லாமல் காரியம் செய்யப் பழக வேண்டும். ஆசையில்லாமல் செய்வதுதான் புண்ணிய காரியம்.
நாம் இப்போது நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் பல கெட்ட காரியம்; வாயால் புரளிப்பேச்சும் அசத்தியமும்; மனத்தினால் கெட்ட நினைவுகள்; பணத்தினால் செய்கிற பாபத்தைப் சொல்லவே வேண்டாம்.
எந்த நான்கால் பாவம் செய்தோமோ, அந்த நான்காலுமே புண்ணியம் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.
உடம்பைப் பரோபகாரம், பகவானைப் பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிப்பது இவற்றில் ஈடுபடுத்திப் புண்ணியம் செய்ய வேண்டும்.
வாயால் பகவந் நாமாவைத் சொல்லிப் புண்ணியம் செய்ய வேண்டும். ‘சம்பாதிப்பதிலேயே பொழுதெல்லாம் போய்விடுகிறது; இதற்கு அவகாசம் இல்லையே’ என்பீர்கள். சம்பாதிப்பது கிருஹஸ்தர்களுக்கு அவசியம்தான். ஆனால் யோசித்துப் பார்த்தால் அதற்கே பொழுது முழுதும் போய் விடவில்லை என்று தெரியும். வீண் பேச்சு, பரிகாசம், வேடிக்கைப் பார்ப்பது, நியூஸ் பேப்பர் விமர்சனம் இவற்றில் எவ்வளவு பொழுது வீணாகிறது? அதையெல்லாம் பகவந்நாமஸ்மரணையில் செலவிடலாமே! இதற்கென்று தனியே பொழுது ஏற்படுத்திக் கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை. காரியாலயத்துக்கு பஸ்ஸிலோ, ரயிலிலோ போகும்போது பகவந் நாமாவை ஜபித்துக் கொண்டே போகலாமே! ஓடி ஓடி சம்பாதிப்பதில் ஒரு பைசாகூட பிற்பாடு உடன்வராதே! மறு உலகத்தில் செலாவணி பகவந் நாமா ஒன்றுதானே?
மனசு பகவானின் இடம். அதைக் குப்பைத் தொட்டியாக்கி இருக்கிறோம். அதைச் சுத்தப்படுத்தி மெழுகி, பகவானை அமரவைத்து, நாமும் அமைதியாக அமர்ந்துவிட வேண்டும். தினமும் ஜந்து நிமிஷங்களாவது இப்படி தியானம் செய்ய வேண்டும். லோகமே மூழ்கிப்போனாலும் நிற்காமல் நடக்க வேண்டிய காரியம் இது. ஏனெனில் லோகம் மூழ்கும்போது நமக்குக் கைக்கொடுப்பது இதுதான்.
பணத்தைக் கொண்டு பகவானுக்காகவும் ஏழைகளுக்காகவும் பலவிதங்களில் தர்மம் செய்து புண்ணியம் சேர்க்க வேண்டும்.
பாபத்துக்கு இரண்டு சக்திகள். ஒன்று, இன்று இப்போது நம்மைத் தவறில் ஈடுபடுத்துவது. இரண்டாவது, நாளைக்கும் இதே தவற்றை நாம் செய்யுமாறு தூண்டுவது. உதாரணமாக, பொடி போடுவது அன்றைக்குக் கெடுதல் செய்கிறது; அதோடு நில்லாமல் நாளைக்கு பொடி போடுவும் தூண்டுகிறது. இதுதான் பழக்க வாசனை என்பது. இந்த வாசனையை மங்கவைத்து, புண்ணியங்களைச் செய்து செய்து புண்ணியவாசனையை ஏற்ற வேண்டும்.
வாசனைதான் மீண்டும் மீண்டும் பாவத்தில் நம்மை இழுக்கிறது. அதற்காகப் பயம் வேண்டாம். நம்மைப் போல் இருந்தவர்கள்—நம்மை விட மகா பாபிகளானவர்கள்கூட—பக்தர்களாகவும், ஞானிகளாகவும் ஆகியிருக்கி்றார்கள். பாபிகளை ரட்சிக்காவிட்டால் ஈஸ்வரனுக்குத் தான் என்ன பெருமை? நாம் பாவியாக இருப்பதாலேதான் அவனுக்குப் பதிதபாவனன் என்ற விருது கிடைக்கிறது. அவனுக்கு அந்த பெருமையை நாம்தான் கொடுக்கிறோம்!
“என்னை மட்டும் சரணடைந்துவிடு! நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்—ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: —பயப்படாதே” என்று தீர்மானமாக அபய வாக்குத் தருகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.
அதனால் நாம் தைரியமாக இருப்போம். எத்தனை சுற்றுச் சுற்றினாலும் அத்தனையையும் திருப்பிச் சுற்றினால் தான் கட்டு கழலும். பாப வாசனை அவ்வளவும் தீர அத்தனை புண்ணிய வாசனை உண்டாக வேண்டும். நடுவே அவசரமும் ஆத்திரமும் வேண்டாம். அப்படிச் செய்தால் சுற்று சிக்கலாகி முடிச்சு விழுந்துவிடும். பொறுமையாக பகவானை நம்பி நம் தர்மத்தைச் செய்தால் நிச்சயம் கைகொடுப்பான்.
மனோ வாக்குக் காயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இந்திரிய வியாபாரத்திலிருந்து திருப்பி, பகவானிடம் வைத்துப் பழகுவதற்காகத்தான் இத்தனை மதங்களும் தோன்றியிருக்கின்றன. ஜீவனாகப்பட்டவன் இந்திரிய சுகங்களுக்காகச் செய்கிற பாபங்களிலிருந்து அவனை மீட்பதற்காகத்தான் ஒவ்வொரு பெரியவரும் தோன்றி ஒரு மதத்தைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். பாபத்தினால், இந்திரிய சுகத்தினால் கிடைக்கிற ஆனந்தம் ரொம்பவும் தற்காலிகமானதுதான். ‘பரமாத்மாவைச் சேர்த்திருப்பதுதானப்பா நிரந்தரமான ஆனந்தம்’ என்று சொல்லி, சம்ஸாரத்திலிருந்து அதனை விடுவித்து பகவானிடத்தில் சேர்ப்பதுதான் ஒவ்வொரு மதத்துக்கும் லட்சியமாகும்.
மதத்தின் பயன்
தர்ம–அர்த்த–காம–மோக்ஷங்களுக்கு ஸாதனமாக இருப்பது மதம். இந்த நான்கையும் புருஷார்த்தங்கள் என்பார்கள்.
‘தர்மம்’ என்பதைப் தமிழில் ‘அறம்’ என்பார்கள். ‘அர்த்தம்’ என்பதைப் ‘பொருள்’ என்று சொல்லுவார்கள். ‘காமம்’, ‘மோக்ஷம்’ என்பவைகளை முறையே ‘இன்பம்’, ‘வீடு’ என்பார்கள். “புருஷார்த்தம்” என்பதில் ‘அர்த்தம்’ என்னும் வார்த்தை இருக்கிறது. முன்பு சொன்ன நான்கிலும் தர்மத்துக்கு அடுத்ததாக ஓர் ‘அர்த்தம்’ இருக்கிறது. ‘அர்த்தத்தில்’ என்றால், ‘வேண்டுமென்று நினைத்தல்’. புருஷன், அதாவது மனிதர்களாகப் பிறந்தவர்கள், தமக்கு வேண்டுமென்று எவைகளை நினைக்கிறார்களோ அவைகள்தாம் புருஷார்த்தங்கள். எதை மனிதன் வேண்டுமென்று நினைக்கிறான்? பொதுவாக, நாம் உள்ள பக்குவக் குறைவான நிலையில் பணமும் பொருளும்தான் வேண்டுமென்று நினைப்பதால், இதற்கே ‘அர்த்தம்’ என்ற பெயர் வந்துவிட்டது. பொருளாதார நூலை ‘அர்த்தசாஸ்திரம்’ என்கிறோம். ஆனால் நம் ஆச்சார்யாளோ இந்த அர்த்தம்தான் பெரிய அனர்த்தம் என்று “பஜகோவிந்த”த்தில் சொல்லிவிட்டார் ஏனென்றால், ரொம்பவும் தற்காலிகமான நிறைவை அல்பாயுஸான ஸந்தோஷத்தை மட்டுமே இந்தப் பொருளானது நமக்குக் கொடுத்து, சாசுவத நிறைவான மோக்ஷத்தைப் பறித்து விடுகிறது என்பதால் அப்படிச் சொன்னார்.
உண்மையில், எப்போதும் குறைவில்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றுதான் மனிதன் நினைக்கிறான். சந்தோஷம் என்பது இரண்டுவிதம். கொஞ்ச நாழிகை இருப்பது ஒரு விதம்; எப்பொழுதும் குறையாமல் இருப்பது மற்றொரு வகை. கொஞ்ச நாழிகை சந்தோஷம் உண்டாக்குவதுதான் இன்பம் அல்லது காமம். காமம் என்பது எல்லா வித உலக ஆசைகளையும் குறிக்கும். இப்படிக் கொஞ்ச காலம் இருந்துவிட்டுப் போய்விடாமல், ஒருமுறை வந்துவிட்டால், எந்தக் காலத்திலும் போகாமல் நிலைத்திருக்கிற பேரின்பமே மோக்ஷம்—வீடு. அந்தப் பேரின்பத்தின் பெருமை தெரியாததால்தான் காமம் என்ற சிற்றின்பம் வேண்டுமென்று மனிதர்கள் நினைக்கிறார்கள்.
ஆகவே, நாம் உண்மையில் வேண்டுமென்று நினைக்க வேண்டியது நான்காவதாகிய வீடு. இப்பொழுது நடைமுறையில் வேண்டுமென்பதோ மூன்றாவதாகிய இன்பம். நாம் விருந்து சாப்பிடுவதனால் ஆனந்தம் உண்டாகிறது. அது ஓர் இன்பம். ஹைகோர்ட் ஜட்ஜ் ஆக இருந்தால் அதுவும் ஒரு வகை இன்பம். நமக்கு நல்வரவு பத்திரம் (Welcome address) வாசித்துக் கொடுத்தால் ஓர் ஆனந்தம்; அதுவும் இன்பந்தான். இந்த இன்பங்கள் சாசுவதமல்ல. இந்தச் சில்லறை இன்பத்தை எதனால் சம்பாதிக்கிறோமோ அது பொருள். அது தானியமாக இருக்கலாம், பணமாக இருக்கலாம், வீடாக இருக்கலாம், மனிதர்களாக இருக்கலாம். பொருளே இன்பத்துக்குச் சாதனம். இந்த இன்பத்தைச் சிறிது பொழுதில் அநுபவித்துத் தீர்த்து விடுகிறோம். மறுபடி இன்பம் வேண்டும் என்ற தவிப்புத் தொடங்குகிறது.
இதற்கு மேல் ஒன்று வேண்டும் என்று தோன்றச் செய்யாத நிலைத்த பேரின்பமே மோக்ஷம். அதுதான் வீடு. நாம் ஊரெல்லாம் சுற்றுகிறோம். அலைந்து கஷ்டப்படுகிறோம். நாம் வந்து அடைய வேண்டியது சொந்தவீடு. ஜெயிலில் ஒருவன் இருக்கிறான். அதிலிருந்து அவன் வெளியே வந்தால் வீட்டுக்குப் போகிறான். ‘வீடு’ என்பதற்கே விடுதலை என்று அர்த்தம். இப்பொழுது மாம்ஸமாகிய ஜெயிலுக்குள் இருக்கிறோம். இந்த உடம்பேதான் நாம் என்று எண்ணி இருக்கிறோம். அது சரியில்லை. உடம்பு நமக்கு ஜெயில். நம் நிஜமான வீடு ஆனந்தமான மோக்ஷம்தான். நாம் ஜெயிலை விட்டுச் சொந்த இடத்தில் இருக்க வேண்டும். பாபகர்மா என்ற குற்றத்துக்கு தண்டனையாக நம்மை உடம்பு ஜெயிலில் போட்டுவிட்டார் ஸ்வாமி. புண்ணியகர்மா செய்தால் அவர் சிக்ஷைக் காலத்தைக் குறைத்து (Condone பண்ணி) வெளியே அனுப்பிவிடுவார். ஜெயிலிலிருந்து கொண்டு புது பாபத்தைப் பண்ணித் தண்டனைக் காலத்தை நாம் ஜாஸ்தியாக்கிக் கொள்ளக்கூடாது; விடுதலையாகி ஸ்வாமிக்குள் போய் இருக்கிற நம் நிஜ வீட்டை அடைய முயல வேண்டும். அந்த வீடுதான் எல்லையற்ற இன்பம். உலகிலே காலம், தேசம், வஸ்து—இந்த மூன்றிலும் குறையாமல் நிறைந்து இருக்கும் பேரின்பம்.
புருஷார்த்தங்களில் முதலாவதாக ‘தர்மம்’ என்பதைப் பற்றிக் கடைசியில் சொல்கிறேன். எந்தக் காரியம் செய்தால் நல்லதோ அது தர்மம். தமிழில் ‘அறம் செய விரும்பு’ என்று முதலில் சொன்னார்கள். நல்லதாகச் செய்வதெல்லாமே தர்மம் என்றாலும், பொதுவிலே தர்மம் என்பது ஈகைக்கே வார்த்தையாக இருக்கிறது. ‘தர்மம் போடப்பா, தர்மத்தாயே’ என்றுதான் பிச்சைக்காரர்கள் யாசிக்கிறார்கள். தான–தர்மம் என்று சேர்த்தே சொல்கிறோம். தமிழிலும் தான சாஸனங்களை அறக்கட்டளை என்றே சொல்லுகிறார்கள். இப்படிப் பார்த்தால் நம் ‘பொருளை’, ‘அர்த்தத்தை’ இன்னொருத்தருக்குக் கொடுப்பது தர்மம். ஆனால் இப்படிக் கொடுப்பதற்கு வேண்டிய பொருள் நமக்கு எப்படிக் கிடைக்கும்? முன் ஜென்மத்தில் நாம் அர்த்தத்தை (பொருளை) மற்றவருக்குக் கொடுத்து தர்மம் செய்திருந்தால்தான் அது மறு ஜென்மத்தில் குட்டி போட்டுக் கொண்டு நமக்குக் கிடைக்கும். தர்மத்தினுடைய பிரயோஜனமே பொருள். இன்பத்துக்குப் பொருள் ஸாதனமாக இருப்பதுபோல் பொருளுக்குத் தர்மம் ஸாதனமாக இருக்கிறது. ஈகை மட்டுமல்ல! எவ்விதமான தர்மம் செய்தாலும், அதாவது பிறருக்கு என்ன நல்லது செய்தாலும் பலனாகப் பொருள் கிடைக்கும்.
நாம் செய்யும் தர்மத்தை ‘இதனால் எனக்குப் பொருள் வேண்டாம்; ஈசுவரன் நினைத்ததைக் கொடுக்கட்டும்’ என்று பலனை எதிர்பாராமல் அர்ப்பணம் பண்ணிவிட்டால், அப்போது நம்மிடத்தில் உள்ள அழுக்கு போய் பேரின்பம் கிடைக்கும். பொருளைத் தரும் தர்மமே அப்பொழுது பரம்பொருளைத் தரும் வீட்டுக்கு ஸாதனமாகிவிடும். இப்படி தர்மமானது பொருளுக்கு ஸாதனமாகவும், அதன் மூலம் இன்பத்துக்கு ஸாதனமாகவும், பற்றின்றி நிஷ்காம்யமாகச் செய்யப்பட்டால் வீட்டுக்கு ஸாதனமாகவும் ஆகிறது. தர்மம் செய்தால் பிரதியாகப் பொருள் கிடைக்கிறது. அந்தப் பொருளைக் கொண்டே மறுபடியும் தருமம் செய்யலாம். இப்போது அர்த்தமே தர்மம் செய்ய ஸாதனமாக இருக்கிறது. இன்பம் ஒன்று தான் தன்னாலும் நிறைவுபடுவதில்லை; பிறவற்றுக்கும் ஸாதனமாக இருப்பதில்லை. கொதிக்கிற மணலில் விட்ட ஜலம் உடனே சுவறிப்போவதுபோல் ‘இன்பம்’ என்பது, தன்னாலும் நிறைவின்றி, வேறெதற்கும் ஸாதனமாகவும் இன்றி, தர்ம சிந்தனை, பொருள், மோக்ஷம் எல்லாவற்றையும் நாசம் பண்ணிவிட்டுத் தானும் நசித்துப் போகிறது. ஆனாலும், இந்த இன்பத்தை இப்போதே விட்டு விடுவோம் என்றால் முடிய மாட்டேன் என்கிறது. அதை அடியோடு விடாமல் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்பபடுத்தித் தரவும், பிறகு படிப்படியாக இந்தச் சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்துக்கு அழைத்துச் செல்லவுமே மதம் என்பது ஏற்பட்டிருக்கிறது. முதலில் இதுதான் அறம் என்று சொல்லி, அதைத் செய்வதற்காகவே எப்படிப் பொருள் ஈட்ட வேண்டுமோ அந்த நியாயமான முறையைச் சொல்லி, அதனால் இன்னின்ன இன்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று பக்குவம் வருகிற வரையில் கிரமப்படுத்திக் கொடுத்து, அப்புறம் இந்தச் சின்ன இன்பங்களை எல்லாம் தொலைத்து, நிரந்தர இன்பமான வீடு என்கிற மோக்ஷத்தைக் காட்டுவதே மதம்.
பந்தத்திலிருந்து விடுதலை பெற்று, ஆத்மா பூரண சுதந்திரத்துடன் எந்நாளும் ஆனந்தமாக இருக்கிற நிலையே மோக்ஷம். இதை நமக்குக் கிட்டச் செய்வதற்கே மதம் என்பது ஏற்பட்டிருக்கிறது.
மநுஷ்யர்கள் இப்போது சாசுவதமான சுகத்தைப் பெறவில்லை என்று நிச்சயமாகத் தெரிகிறது. இவர்களை அப்படிப்பட்ட சுகத்தில் சேர்க்கவே எல்லா மதங்களும் தோன்றியிருக்கின்றன. இந்த சாசுவத சௌக்கிய நிலைக்குத் தான் மோக்ஷம் என்று பெயர். இந்திரியங்களால் பெறும் அர்த்தசௌக்கியத்தைத் தேடிப்போகிறதைத் தொலைத்தால்தான் சாசுவத சௌக்கியம் கிடைக்கும். இம்மாதிரி இந்திரிய சுகத்தைத் தொலைக்கவும், சாசுவத சௌக்கியம் கிடைக்கிற வரைக்கும் அதற்கு அநுகூலமாக சமூக வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்குமே தர்ம நியதிகள் எல்லாம் வேண்டியிருக்கின்றன. மோக்ஷத்தை லட்சியமாகக் கொண்ட மதமே இந்த தர்மங்களையும் ஏற்படுத்தித் தர வேண்டியதாகிறது. இதனால்தான் தர்மம் என்றாலே அதற்கு மதம் என்றுதான் பெரியோர்கள் பொருள் கொண்டார்கள்.
ஏதோ ஒரு மாயா சக்தியால் இப்படி மநுஷ்யர்களாகியிருக்கிற நாம் பொருளையும், சிற்றன்பங்களையுமே வேண்டுமென்று நினைக்கிறோம். எதை வேண்டுமென்று நினைக்கிறோமோ அதுதான் அர்த்தம். வாஸ்தவத்தில் நம் நிறைவான நல்லதற்குப் பொருளும் காமமும் வேண்டாதவை என்றாலும் மநுஷ்ய ஸ்வபாவத்துக்கு (Human nature- க்கு) விட்டுக் கொடுத்து இவற்றையும் நம் பெரியவர்கள் புருஷார்த்தங்களில் சேர்த்தார்கள். ஆரம்பத்திலேயே, எல்லாக் காரியங்களுக்கும் அடிப்படையாக தர்ம உணர்ச்சியை உண்டாக்கிக் கொண்டு விட்டால், அப்புறம் பொருளும் காமமும்கூட நம்மை ஒரேயடியாகப் கெடுத்துவிடாதபடி, இவற்றைக் கட்டுப்பாட்டில் அளவறிந்து வைத்திருக்கும் என்பதால் தர்மத்தை முதல் புருஷார்த்தமாகச் சொன்னார்கள். பொருளையும் காமத்தையும் நாம் அர்த்திப்பது (வேண்டுமென்று நினைப்பது) போலவே தர்மத்தையும் அர்த்திக்க வேண்டும். அப்போது அது பொருள், இன்பம் இவற்றின் விஷப் பல்லைப் பிடுங்கி விடும்; முடிந்த முடிவாக நாம் அர்த்திக்க வேண்டிய வீட்டில் நம்மைச் சேர்த்துவிடும்.